2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஜனவரியில் மீள ஆரம்பம்

Janu   / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 12:07 - 1     - {{hitsCtrl.values.hits}}

காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகு சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்திற்கு ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகப்பட்டினம் படகு சேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி  சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் சனிக்கிழமை (14)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து  கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ இந்தியாவில் சுபம் குரூப் ஒப் கம்பெனிஸ் பல்வேறு வியாபார நிறுவனங்களை உள்ளடக்கியதொன்றாகும். குறிப்பாக, தனிமனிதனின் தலைமைத்துவத்தில் 500 இற்கும் மேற்பட்ட பாரவூர்தி போக்குவரத்து சேவையை வழங்குவதாக இருக்கின்றது. 

அத்துடன் எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகப்பட்டினத்துக்கு இடையிலான படகு சேவையில் முதலீடுகளைச் செய்துள்ளது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படகு சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 

இம்மாதம் 23 ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்குவதற்கான நிலைமைகளும் உள்ளன. இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த படகு சேவையை சிறிய காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனம் நேரடியாக கையாளப்படுகின்றது.

நாங்கள் படகு சேவையை கடந்த மூன்று மாத காலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன. எனினும் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது.

மீள படகு சேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக்கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம். 

தற்போது இருவழி கட்டணமாக 9700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது. அதை நாம் 8500 இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு பத்து கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டு வர முடியும்.

மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டு செல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணப்பொதிகளுக்கான முன்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும்.

அதேநேரம், நாகைப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பித்தாலும் அவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதில் நெருக்கடிகள் இருந்தன.

இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி பிரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம். 

அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பாணங்களையும் இலவசமாக வழங்க உள்ளோம். மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் நாம் படகில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது.

சுபம் நிறுவனம் நேரடியாகவே படகு சேவையை கையாளுவதன் காரணமாக பயணச்சீட்டுகள் மற்றும் குறுகிய பயணத்திட்டங்களை மையப்படுத்தி  sailsubam.com  என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த  இணையத்தளத்தில் குறுகிய பயணத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, இரண்டு இரவு மூன்று பகல் தங்குமிட  மற்றும் உள்ளக போக்குவரத்து வசதிகளுடன் காணப்படுகின்றது. இதற்கான தொகை இந்திய ரூபாவில் 15ஆயிரமாக காணப்படுவதோடு இலங்கை ரூபாவில் 50ஆயிரம் வரையில் இருக்கிறது. இவ்விதமான திட்டங்கள் நடுத்தர பயணிகளை மையப்படுத்தியதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. பிரசித்தி பெற்ற சமய தலங்கள், வரலாற்று இடங்கள், கலாச்சார முக்கியத்துவ பகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புகளை கொண்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகளை இந்தப் பகுதிகள் மிகவும் கவர்ந்தவையாக இருக்கின்றன என்பதை எம்மால் உறுதியாகக் கூற முடிகின்றது. ஆகவே குறைந்த செலவில் சுற்றுலா பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு தொடர்ச்சியான படகு சேவையை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 1

  • பிரசாத் Tuesday, 17 December 2024 01:17 PM

    சபரிமலை பயணம். யாத்திரை செல்லும் எங்களுக்கு உங்களது கட்டணம் எப்படி இருக்கும். டிக்கெட் எப்படி பெறுவது. அதையும் கொஞ்சம் விளக்குங்கள். விசா விண்ணப்ப தேவை இல்லை என்று நினைக்கிறேன். உங்களது கருத்து ஜனவரி ஒன்றாம் நாளில் இருந்து 15 நாள் மட்டும் உண்டு. 14 நாங்கள் ஜோதி தரிசனம் பார்க்க வேண்டும் உங்களது கருத்து. யோசனை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X