2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

170 தேசிய கொடிகளை அடையாளம் காட்டும் சிறுவன்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில், இரண்டரை வயது சிறுவன் ஒருவன் 170க்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் காட்டி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

தமிழகம், தருமபுரியை பூர்வீகமாகக் கொண்ட ஜோதிபிரசாத்-சரண்யா தம்பதியின் ஒரே மகனான இஷாந்த் என்ற சிறுவனே இத்தகைய திறமையுடன் மிளிர்கின்றான்.

இச்சிறுவன், அமெரிக்கா, அரிசோனா மாகாணம் போனிக் ஸிலில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.

இரண்டரை வயதான இந்தச் சிறுவன் இன்னும் பாடசாலையில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் 170 க்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய கொடிகளைக் காட்டினால் கொடிக்கான நாட்டின் பெயரை சரியாக கூறுகின்றான்.

அதேபோல தமிழ் உயிர் எழுத்துகள், எண்கள், ஆங்கில எழுத்துகள் ஆகியவற்றை எப்படி கலைத்துக் கொட்டினாலும் அவற்றை வரிசைப்படி அடுக்கி வைக்கிறான்.

கணிதத்தில் வரும் வட்டம், சதுரம், அரை வட்டம், செவ்வகம், அறுகோணம் உள்ளிட்ட உருவங்களைக் காட்டினாலும் துல்லியமாகக் கூறுகிறான்.
இதுதவிர ஆங்கில மாதங்களை வரிசைப்படி கூறுதல், உலக வரைபடத்தில் தேசங்களை அடையாளம் காட்டுதல் என அதிதிறமைசாலியாக இச்சிறுவன் காணப்படுகின்றான்.

டெப்லெட்டில் அமெரிக்காவின் வரைபடத்தில் உள்ள 50 மாகாணங்களையும் ஒன்றாக குவித்து வைத்து அந்த துண்டுகள் ஒவ்வொன்றையும் எடுத்து அதற்கே உரிய இடங்களில் பொருத்தி அமெரிக்காவின் முழு உருவத்தையும் அமைத்து விடுகிறான்.

அம்மா இங்கே வா வா... பாடலில் தொடங்கி சுப்ரபாதம் உள்ளிட்ட சில பக்தி பாடல்கள் வரை அழகான மழலையில் பாடி அசத்துகிறான்.
இப்படி இஷாந்தின் பிரமிக்க வைக்கும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தருமபுரியில் வசிக்கும் தனது தாத்தா பாட்டியான ராமசாமி-மங்களா வீட்டுக்கு தாய் சரண்யாவுடன் சிறுவன் இஷாந்த் வந்துள்ளான்.
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் செய்யும் அனைத்து செயல்களையும் இஷாந்த் பிசகாமல் செய்து அசத்துவதைக் கண்டு அவனது குடும்பத்தாரும் உறவினர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 'இஷாந்த் 11 மாத குழந்தையாக இருந்தபோதே 3 வண்ணங்களை சரியாக தெரிந்து வைத்துக்கொண்டு அடையாளம் காட்டுவான். அதைப் பார்த்து நானும் என் கணவரும் தொடர்ந்து இஷாந்தை ஊக்கப்படுத்தி வந்தோம். அவனுக்கு பொம்மைகளுக்கு பதிலாக கற்றல் தொடர்பான பொம்மைகள், புத்தகங்களைத் தான் இதுவரை வாங்கிக் கொடுத்துள்ளோம்' என இஷாந்தின் தாய் சரண்யா தெரிவித்துள்ளார்.

'அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளியில் அவனை அழைத்துச் சென்றபோது 5 வயது குழந்தைகளுக்கு உரிய ஐ.க்யூ இஷாந்துக்கு இருப்பதாகக் கூறினர்.

இஷாந்துக்கு நல்ல ஊக்கம் கொடுத்தால் சிறந்த அறிவாளியாக வருவான் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கினர்' என்றும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .