2025 மார்ச் 22, சனிக்கிழமை

வவுனியாவில் 1,231 பேர் களத்தில்

Editorial   / 2025 மார்ச் 20 , பி.ப. 06:27 - 0     - 26

க. அகரன்

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 103உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக  1,231 வேட்பாளர்கள்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான பி.ஏ. சரத்சந்திர தெரிவித்தார்.  

 வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (20) மதியம் 12 மணியளவில் நிறைவுக்கு வந்திருந்தது.  

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட உள்ள கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.   

மாநகர சபை

இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட  வவுனியா மாநகர சபைக்கு முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது. இம்முறை மாநகர சபையில் மொத்தமாக 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 10அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்படி 11 தரப்புக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தெற்கு தமிழ் பிரதேச சபை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 12 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தது. அவற்றில் ஜனநாயக தேசிய கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்க பட்டுள்ளதுடன் 13 தரப்புக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

செட்டிகுளம் பிரதேச சபை

வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் விண்ணப்பித்த 12 தரப்புக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

வடக்கு பிரதேச சபை

வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 09 அரசியல் கட்சிகளும் 0 2சுயேட்சைகுழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவற்றில்,இரண்டு சுயேட்சை குழுவின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

சிங்கள பிரதேச சபை

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில்16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 07அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் 103உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 71 தரப்புக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தது.அவற்றில் 11 தரப்புக்கள் வேட்புமனுக்களை கையளித்திருக்கவில்லை. 

இத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில்  129293 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X