2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

வட்டுவாகல் பாலத்திற்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணியினை ஆரம்பிப்பதற்கு 2025 ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை ( 17) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும்போது இவ்விடயத்தை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்திற்கான நிதியை இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களுக்கும், கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்  பார்க்கையில் 
 முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

அந்தவகையில் கடந்த வருடம் நவம்பர்மாதம் 29ஆம்திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டுமென கூட்டுறவுப் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், குறித்த கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும், சக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் குறித்தும் நேரடியாகக் காண்பித்திருந்தார்.

அதன்பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில் வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது டன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன்போது வட்டுவாகல் பாலம் அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்திருந்தார்.

இத்தகைய சூழலிலேயே திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X