2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

போராட்டத்துக்கான தடை உத்தரவை நீக்கிய யாழ்.நீதிமன்றம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த் 

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளை வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கம் செய்தது.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஒருமுக விளக்கத்தில் வழங்கிய கட்டளையை பிரதிவாதிகள் முன்வைத்த ஆட்சேபனையை அடுத்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நீக்கியது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு நேற்றுமுன்தினம் தடை உத்தரவு வழங்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், சட்டத்தரணி க. சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ்
இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும்
முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

அதனடிப்படையில் பிரதிவாதிகள் முன்னிலையாகாத நிலையில் தடை உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் இந்த தடை உத்தரவு வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் மீள் விசாரணைக்கு வந்தன.

சட்டத்தரணிகள் வி. மணிவண்ணன், வி. திருக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.

அதனால் ஒருமுக கட்டளையாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம் கொவிட் -19 நோய்த்தொற்று சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டால் அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை என்று எடுக்க பொலிஸாரை அறிவுறுத்தியது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .