2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மீனவர்கள் 18 பேருக்கு பிணை

George   / 2016 நவம்பர் 03 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சிப்பிட்டியில் வீதியை மறித்து, மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, கைதுசெய்யப்பட்ட 18 மீனவர்களும் இன்று வியாழக்கிழமை, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வழக்கு விசாரணைக்காக சமூகமளிக்காத மேலும் ஆறு பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் கற்பிட்டி பிரதேசத்தில் லைலா வலையைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு புத்தளம் நீதிமன்றத்தினால் தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியில் வீதியை மறித்து, கடந்த மாதம் 21, 22 ஆம் திகதிகளில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

கற்பிட்டியில் 'லைலா' வலைகளைப் பாவித்து மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மற்றொரு தரப்பு மீனவர்கள் இவ்வாறு வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது.

இரு தரப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயத்துக்குள்ளானதுடன், இரு மோட்டார் சைக்கிள்களும், வானொன்றும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மிக மோசமாக நடந்துகொண்டதாக அடையாளம் காணப்பட்ட 24 மீனவர்களை இன்று வியாழக்கிழமை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 நீதிமன்றம் விடுத்த அழைப்புக்கமைய, புத்தளம் மாவட்ட நீதிமன்றில் 18 மீனவர்கள்  தமது சட்டத்தரணிகள் ஊடாக ஆஜராகியிருந்தனர்.

18 மீனவர்களையும் தலா ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
இன்று தினம் நூற்றுக்கும் அதிகமான மீனவர்கள், புத்தளம் நீதிமன்றத்துக்கு வந்தமையால், அங்கு பதற்றம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், புத்தளம் நீதிமன்றத்துக்கு கடும் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .