2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கழிவு முகாமைத்துவங்களை முறைப்படுத்த வலியுறுத்து

Editorial   / 2017 ஜூலை 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை முறைப்படுத்தி வினைத்திறன்மிக்க வகையில் அவற்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினை அரசாங்கத்தின் அல்லது அரசியல் கட்சிகளின் பிரச்சினையல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவருடைய வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி, இது தொடர்பில் அனைவரும் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கம்பஹா ஸ்ரீ போதி கல்லூரியின் விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற கம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மாவட்ட மட்டத்தில் நாடளாவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்படும் சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாட்டு தொடரில் இது இரண்டாவது மாநாடாகும். முதலாவது மாநாடு அண்மையில் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி நடைபெற்றது.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சில சந்தர்ப்பங்களில் நிறுவன ரீதியாக உள்ள பிரச்சினைகள் கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

எனவே, நிறுவன ரீதியாக சரியான ஒருங்கிணைப்புடன் செயற்பட்டு அரசாங்கத்தின் பிரச்சினையாக மட்டுமன்றி முழு நாட்டினதும் பிரச்சினையாகக் கருதி, இந்த நிகழ்ச்சித் திட்டத்தை முறைப்படுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ள சுற்று நிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் கடந்த காலத்தைப் பார்க்கிலும் முன்னுரிமை அளித்து செயற்படுமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இது தொடர்பாக பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது குறித்த நிகழ்ச்சித் திட்டம் பற்றி வைத்திய நிபுணர் ஹசித்த திசேராவினால் ஒரு விசேட உரை இங்கு நிகழ்த்தப்பட்டது. அத்துடன் பாடசாலைகளில் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட உரை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எஸ். ஹேவகேயினால் நிகழ்த்தப்பட்டது.

கழிவு முகாமைத்துவம் தொடர்பாக விசேட உரை மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் மகேஷ் ஜயவீரவினால் நிகழ்த்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, சரத் பொன்சேக்கா, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, சுதர்ஷனீ  பெர்ணர்ந்துபுள்ளே, மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வர்ன. முதலமைச்சர் இசுர தேவப்பிரிய,  பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம், கம்பஹா தக்சிலா கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அப்பாடசாலையின் குறைபாடுகளைக் கேட்டறிந்தார்.

பாடசாலைக்கு விளையாட்டரங்கு மற்றும் புதிய கட்டடத்தைப் பெற்றுத்தருமாறு மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு ஏற்ப 50 இலட்சம் ரூபாயை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன் அவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .