2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குப்பைகளை அகற்றுமாறு மீனவர்கள் கோரிக்கை

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான் 

நீர்கொழும்பு, போருதொட்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள கம்மல்தொட்ட மீன் விற்பனைச் சந்தை கடற்கரைப் பகுதியில், கடந்த ஒரு வருட காலமாகக் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாக, மீனவர்களும் சந்தைக்கு வரும் பொதுமக்களும், விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக  அப்பகுதி மீனவர்கள் சிலர் கருத்துத்  தெரிவிக்கையில்,

“கடந்த வருடம் மே மாதம் கடுமையாகப்  பெய்த மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தின்போது, நீர்கொழும்பு களப்பு மற்றும் மா ஓயா ஆற்றிலிருந்து கடலுக்குள் அடித்து வரப்பட்ட மீன்பிடி வலைகள், மற்றும் பல்வேறு வகையான குப்பைகள், கடலில் பரவிக்  காணப்பட்டன.

"மீன்பிடிப்படகுகளின் கீழ் சிக்குண்டிருந்த இந்த கழிவுகளினால்,  படகு கவிழ்ந்து மீனவர்கள் இருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்தனர்.

“இதனையடுத்து, எமது மீனவர் சங்கத்தின் மூலமாக இரண்டு இலட்சம்  ரூபாய் பணத்தைச் செலவிட்டு, பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி, கடலில் தேங்கி நின்ற குப்பைகளை  அகற்றி, கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தோம்.

“ஆயினும், இந்தக் கழிவுகளைக் கரையிலிருந்து அகற்றிச் செல்லுமாறு நீர்கொழும்பு மாநகர சபை, நீர்கொழும்பு கடற்றொழில் காரியாலயம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்குப் பல முறை அறிவித்தோம். அதிகாரிகள் இதனைப் பார்வையிட்டுச் சென்றபோதும், குப்பைகளை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

“கடற்கரையோரத்தில் பல மீற்றர் தூரத்துக்குக் குப்பைகள் குவிந்து உள்ளன. இதன் காரணமாக சுற்றாடல் மாசடைவதுடன், பல்வேறு நோய்களும் எற்படுகின்றன. கடற்கரையின் அழகுத் தோற்றமும் பாதிக்கப்பட்டுள்ளது.

“எனவே அதிகாரிகள், இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .