2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காணாமல்போனோர் விடயத்தில் அரசாங்கத்துக்கு முழுப்பொறுப்பு உள்ளது

Niroshini   / 2016 மார்ச் 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசாதாரண சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் புதிய பொறிமுறை அமைக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், காணாமல்போனவர்கள் கண்டறியப்படல் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கள் ஆகிய விடயங்களில் அரசாங்கம் முழுப்பொறுப்புடையதாகும் எனவும் குறிப்பிட்டார்.

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

காணாமல்போனவர்கள் கண்டறியப்பட வேண்டும். அவர்களது உறவினர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதற்கான முழுப்பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது. அதேபோன்று வருடக்கணக்காக சிறைகளில் வாடுபவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவேண்டும்.

காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்துள்ள  கருத்துக்களை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன், இவ்வாறான பிரேரணையை சபையில் முன்வைத்தமைக்கும் நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.

“அசாதாரண சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற தருணங்களில் வீதிகளில் சாதாரணமாக நின்றிருந்த அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கும் சம்பங்கள் நடைபெற்றிருக்கின்றன.

தற்போது பலர் சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக வாடுகின்றார்கள். அவர்களுக்கு ஏதோவொரு பொறிமுறையின் ஊடாக விடுதலையளிக்க வேண்டும். அதேநேரம், வட, கிழக்கில் 89ஆயிரத்துக்கும் அதிகமான விதவைகள் காணப்படுகின்றார்கள்.

அவர்களுக்கு பாரிய தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. அவை தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்குரிய நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும்” என அவர் மேலும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .