Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் ஈரான் மீதான சர்வதேச வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்பு, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் முதன் முறையாக இருதரப்பு பரஸ்பர வர்த்தகத்தினை பலப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
கடந்த புதன்கிழமை (24) கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற பொருளாதார ஒத்துழைப்புக்கான ஈரான் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 11ஆவது அமர்வின் போதே இந்த இருதரப்பு பரஸ்பர வர்த்தகத்தினை பலப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. மறுநாள் வியாழன் (25) கூட்டு ஆணைக்குழுவின் 11ஆவது அமர்வின் தீர்மானங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஈரானிய குடியரசின் சக்திவள அமைச்சர் ஹமிட் சிட்சியன் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகிய இருவருமே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டனர்.
இந்த அமர்வில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேலும் விஸ்தரிப்பது குறித்தும் புரிந்துணர்வு, சிறந்த பொருளாதார ரீதியிலான உறவுகளை நீடிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான தேவைப்பாடுகள், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீடு உட்பட இதர தேவைப்பாடுகள் ஆராயபட்டது. இரு நாடுகளாலும் 2004ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மீளாய்ப்படுவதுடன் அதன் சலுகைகளும் முன்னெடுக்கப்படுவது குறித்து இலங்கையும் ஈரானும் இணங்கிக் கொண்டனர்.
ஒரு நாள் கொண்ட இவ்வமர்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஈரானிய குடியரசின் சக்தி வள அமைச்சர் ஹமிட் சிட்சியன் மற்றும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷெயிரி மீரானி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டதுடன் இரு தரப்பிலும் இருந்து உத்தியோக பூர்வ அதிகாரம் அரச அதிகாரிகள் உட்பட 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் நிரம்பியிருந்தனர்.
'பொருளாதார சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ரீதியிலான உறவுகள் நீடித்து வருகின்றது. இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும், வர்த்தக நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான தேவைப்பாடுகள் இரு தரப்பினருக்கும் காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு நாட்டின் மொத்த வர்த்தகப் புரழ்வு 188 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது அது 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை அது 114 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது என கூட்டு ஆணைக்குழுவின் 11ஆவது அமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் ரிஷாட் தெரிவித்திருந்தார்.
'ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடாக நாம் விளங்குகின்றோம். அத்துடன் தெங்கு, முந்திரி, நார்ப் பொருட்கள் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்கின்றோம். அத்துடன் ஈரானிலிருந்து நாம் பிரதானமாக மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றோம்.
பசளைகள், இரும்பு, உருக்கு, மின்சார மாற்றிகள் ஆகியவற்றையும் இறக்குமதி செய்கின்றோம். கடந்த சில வருடங்களாக மசகு எண்ணெய் இறக்குமதியில் பல்வேறு கஷ்டங்களை நாம் சந்தித்த போதும் தற்போது வர்த்தகப் பொருளாதார துறையில் ஈரானும் இலங்கையும் முன்னணியில் திகழ்கின்றது.
வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான தேவைப்பாடு நம்மிடம் உள்ளது. இரண்டு தரப்பினருக்குமிடையில் பரஸ்பர கலந்துரையாடல்கள் அவசியமாகின்றது. இரண்டு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ஊக்குவிப்பு நிகழ்வுகளை மேற்கொண்டு, தனியார் துறைக்கு ஊக்குவிப்பை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் எமக்கிடையிலான நல்லுறவுகளும் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளும் மேலும் முன்னேற்றமடையுமென நான் உறுதியாக நம்புகின்றேன்.
எதிர்காலத்தில் ஈரான், இலங்கையில் முதலீட்டுத் துறையில் ஆர்வம் செலுத்த வேண்டுமென நான் ஆலோசனை தெரிவிக்கின்றேன். அதற்கு எனது அமைச்சு முழுப் பங்களிப்பையும் உதவியையும் உங்கள் வழியாக வழங்குமென தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஈரான் முதலீட்டாளர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு இது பொருத்தமான சந்தர்ப்பம். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எமது முதலீட்டுச் சந்தையை விரிவுபடுத்தியுள்ளோம், மேலும், இலங்கையில் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய பல்வேறு மையங்கள் இருப்பதனால் ஈரானிய உல்லாசப்பயணிகள் இங்கு வருகை தர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கின்றேன்' என்றும் தெரிவித்தார்.
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இட்டுச்செல்கின்றது. எனது அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு எனக்கு இவர்கள் பக்கபலமாக இருக்கின்றார்கள்' என அமைச்சர் ரிஷாட் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
32 minute ago
32 minute ago