2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முக்கோண காதல்: புது ஜோடியைக் கொன்ற காதலன்

Editorial   / 2024 ஜனவரி 03 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி  (நக்கல வத்த) கல்வெட்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண்ணும், ஆணொருவரும் உயிரிழந்துள்ளதாக மொனராகலை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி  ஜானக சிறிரத்ன தெரிவித்தார்.

  மொனராகலை-பிபில வீதியில் இடம்பெற்றது விபத்தல்ல,  அவரது முன்னாள் காதலனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தம்பகல்ல, கொட்டகலை, மஹாலந்த கிவுல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான திசாநாயக்க முதியன்செலாகே அமிதா ஜீவமாலி (37) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் ஆயுர்வேத துறையில்  பணியாற்றி வருகிறார்.

தனது முதல் திருமணத்திலிருந்து பிரிந்த பின்னர், மொனராகலை பிபில வீதியின் சாரதி ஒருவருடன் சுமார் ஐந்து வருடங்களாக   வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவரை பிரிந்து மற்றுமொரு சாரதியுடன் காதலில் ஈடுபட்டுள்ளார்.

அவ்வாறு இருக்கையில், முதலாவது காதலன், அப்பெண்ணுக்கும், அவருடைய  தற்போதைய காதலனுக்கும் தொலைபேசியிலும், பல முறை மிரட்டல் விடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி காலை   புதிய காதலனுடன் அப்பெண்  மோட்டார் சைக்கிளில் பதுளை பகுதிக்கு செல்வதை அறிந்த பழைய காதலன் அவர்கள்   மொனராகலை-பிபில வீதியில்  பயணித்துக்கொண்டிருந்த போது,  மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணின் புதிய காதலன் மற்றும் பெண், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி வான், படல்கும்புர கரவிலபாறையில் உள்ள வீடொன்றுக்கு முன்னால்   விடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

  அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற முன்னாள் காதலன்,   சட்டத்தரணி ஊடாக மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் நீண்ட   விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என கண்டறிந்தனர். இந்நிலையில், சந்தேகநபரை வியாழக்கிழமை (04) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .