2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலையை வழமைக்குத் திருப்புமாறு வேண்டுகோள்

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

பிரதேச மக்களின் நன்மை கருதி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அதன் வழமையான சிகிச்சைகளை நடத்திச் செல்ல ஏற்பாடுகளைச் செய்து தருமாறு, காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவரும் அவ்வைத்தியசாலையின் அத்தியட்சகருமான வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர் வேண்டுகோள் விடுத்தார். 

இது விடயமாக மேலும் தெரிவித்த வைத்திய அத்தியட்சகர், “சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கடந்தாண்டின் முற்பகுதியில் இருந்து விசே‪ட கொரோனா வைரஸ் சிகிச்சைப்  பிரிவாக செயற்பட்டு வருகிறது.

“கொரோனா வைரஸ் முதலாம் அலை தணிந்திருந்த கடந்த வருடத்தின் ஜுன் மாதம் தொடக்கம் இரண்டாம் அலை உருவாகிய ஒக்டோபர் மாதம் வரையில் ஒரு சில மாதங்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அதன் வழமையாக சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கக் கூடியதாகவிருந்தது.

“எனினும், இரண்டாம் அலை உருவான ஒக்டோபர் மாதம் தொடக்கம் அவ்வைத்தியசாலை மீண்டும் அதன் வழமையான சேவைகளை நிறுத்தி, தற்போது வரை விசே‪ட கொரோனா வைரஸ் சிகிச்சைப்  பிரிவாக செயற்பட்டு வருகிறது.

“இவ்வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து தற்போது மார்ச் வரை சுமார் 15 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மாத்திரம் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கக் கூடிய 50 படுக்கை வசதிகளைக் கொண்ட பிரிவு  இவ்வைத்தியசாலையின் வளாகத்தில் சுமார் 200 மீற்றர் தூரத்தில்  உள்ளது.

“ஆகையால், போதிய இடவசதி உள்ள இவ்வைத்தியசாலையில், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் ஒரு புறம் சிகிச்சையளிக்கின்ற அதேவேளை, ஏனைய நோயாளர் சிகிச்சைகளையும் இங்கு ஆரம்பிக்க முடியும்” என்றார்.

இதேவேளை, மட்டக்களப்பு  பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட்டின் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் அரசாங்கத்தின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்படுமென, நஸீர் அஹமட் தெரிவித்ததாகவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X