2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

குடும்பத் தகராறில் குடும்பஸ்தர் பலி; மனைவி, பிள்ளைகள் கைது

Princiya Dixci   / 2021 மார்ச் 11 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆறுமுகத்தான் குடியிருப்பு, பாரதி வீதியை அண்டியுள்ள வீட்டில் இடம்பெற்ற குடும்பத் தகராறு காரணமாக கணேஸ் யோகராசா (43 வயது) என்ற குடும்பஸ்தர் பலியாகியுள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மரணமடைந்தவரின் மனைவியும் மகனும் மற்றும் இரு பெண் பிள்ளைகளும் இன்று (11)  கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (09) தாக்குதலுக்குள்ளான நிலையில் படுகாயங்களுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர், சிகிச்சை பயனின்றி நேற்று (10) இரவு மரணித்துள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தில் நீண்ட காலமாகவே தகராறு நிலவி வந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமான பொலிஸிலும் ஏற்கெனவே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

மனைவி, கணவனிடமிருந்து பிரிவதற்காக விவாகரத்துக் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மனைவியும் பிள்ளைகளும் வாழும் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு யோகராசா சென்ற நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து இவரைத் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைப்பகுதி பலமாகத் தாக்கப்பட்டு யோகராசா படுகாயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் உதவியோடு, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிசிக்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மனைவியும் அவரது மகனும் வைத்திய சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இரு பெண் பிள்ளைகளும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் பாடசாலை செல்லும் மாணவிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கே. ஜீவராணி, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X