இந்தியாவின் வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 18 உறுப்பினர்கள் உள்ளடங்கிய பேராளர்கள் 2025 மார்ச் 17 முதல் 18 ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வர்த்தக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகன வகைகள் உட்பட சகல வாகனங்களையும் உற்பத்தி செய்யும் முன்னணி இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறித்த பேராளர் குழாமில் அங்கம் வகித்திருந்தனர்.
குறித்த பேராளர்கள் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்கே ஆகியோரைச் சந்தித்திருந்தனர். அத்துடன் நிதி அமைச்சு, இலங்கை முதலீட்டுச் சபை, மற்றும் சிலோன் மோட்டார் வாகன வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளையும் இப்பேராளர்கள் சந்தித்திருந்தனர்.
மேலும் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே அவர்களையும் சந்தித்த இப்பேராளர்கள் இலங்கையில் இந்திய வாகன நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அவருக்கு விவரித்திருந்தனர்.
இந்த விஜயமானது வாகன உற்பத்தித் துறையில் அபிவிருத்தியினையும் ஒத்துழைப்பினையும் வலுவாக்கி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார பங்குடைமையினை மேலும் வலுவாக்குகின்றது.