2025 மார்ச் 25, செவ்வாய்க்கிழமை

திஸ்ஸவில் கட்டிடம் திறப்பு: மக்கள் எதிர்ப்பு

Editorial   / 2025 மார்ச் 23 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கும், தையிட்டி திஸ்ஸ விகாரை பகுதியில் இராணுவத்தின் முழு முயற்சியுடன் மற்றொரு சட்டவிரோத கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை (23)  காலை திறந்து வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

திஸ்ஸ விகாரை பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும் என்று புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு மேலதிகமாக, அந்தப் பகுதியில் மிக இரகசியமான வகையில் வேறுசில சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இராணுவத்தினர் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதற்கு பதில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மறுப்புத் தெரிவித்திருந்தார். “தான் சம்பவ இடத்தை பார்வையிட்ட தாகவும், அவ்வாறான சட்டவிரோத கட்டிடங்கள் எவையும் இல்லை” என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இராணுவத்தால் அமைக்கப்பட்டு வந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டிடங்களே  மத வழிபாடு களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (23) கையளிக்கப்பட்டன.அந்தக் கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்காக மடாலயமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையில் தொடர்ச்சியாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்கு திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X