2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 31 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட முத்து நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி, பாடசாலைக்கு முன்னால் இன்று (31) காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெற்றோர்கள்  மற்றும் மாணவர்கள் இணைந்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

“ஆசிரியர் வேண்டும்”, “ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்” மற்றும் “ஆசிரியரை மாற்றாதே”, போன்ற வாசகங்களை ஏந்தியவாறு, இதில் கலந்துகொண்டோர் கோஷங்களை எழுப்பினர்.

தரம் 09 வரை காணப்படுகின்ற குறித்த பாடசாலையில் தற்போது 06 ஆசிரியர்களே கற்பித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே 2019 மற்றும் 2020 இல் தலா இரு ஆசிரியர்களும் 2021 இல் மூன்று ஆசிரியர்களும் இடமாற்றப்பட்ட போதிலும் பதில் ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிபரை இடமாற்றம் செய்து, தற்போது பதில் அதிபராக ஆறு ஆசிரியர்களில் ஒருவர் கடமையாற்றுவதாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தரம் 2, 3க்கான நிரந்தர ஆசிரியர்கள் பல மாதங்கள் இல்லாத நிலையிலும் கல்வி நடவடிக்கைகள் பின்னோக்கி செல்வதாகவும் இது தொடர்பில் உரிய கல்வி அதிகாரிகளுக்கு, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மூலமாக தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X