2025 மார்ச் 06, வியாழக்கிழமை

வீணைக்கு வடக்கில் கிறீஸ் பூதம் சந்தேகம்

Freelancer   / 2025 மார்ச் 06 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் கிறீஸ் பூதம் கடந்த காலங்களில் ஏவப்பட்டது போன்ற சூழலை உருவாக்கத் திட்டமிடப்படுகிறதா? என்று சந்தேகத்தை வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம், இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

யாழ். ஊடக மையத்தில், புதன்கிழமை (05)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தயாராக இருப்பதாக சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற  முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றன.  அதுதொடர்பாக கட்சி மட்டத்தில்  பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, கடந்த காலங்களைப் போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

அது ஒருபுறமிருக்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரையில், தற்போதைய அரசாங்கத்தைக் கண்மூடித்தனமாக விமர்சிக்கும் நோக்கம் இல்லாத போதிலும், சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தார்மீக கடப்பாடு இருப்பதாக இருப்பதாகக் கருதுகிறோம்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்ற போது எமது பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்  என்பதில் மற்றுக் கருத்தில்லை.

எமது மக்களைப் பொறுத்தவரையில், காணிகள் விடுவிக்கப்படும், காணாமல் போனோர் விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும், அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற விடயங்கள் சொல்லப்பட்ட போதிலும், இதுவரையில் அவை தொடர்பான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் ஆயுத ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாள்  வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற போது வடக்கில் கடந்த காலங்களில் கிறிஸ் பூதங்களை ஏவி விடப்பட்டது  போன்று மீண்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .