2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கதிர்காம காட்டுப்பாதை: இந்துக்கள் மத்தியில் குழப்பம்

Editorial   / 2024 ஜூன் 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி.சகாதேவராஜா

வரலாற்றுப்  பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதியில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

அதாவது  இப் பாதை திறக்கப்படும் திகதி ஜூலை 2 ஆம் திகதி எனக் கூறப்பட்டுள்ளது .

 கதிர்காமத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம் பெற்ற கூட்டத்தில் இத் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 2 ஆம் திகதி திறக்கப்பட்டு 14 ஆம் திகதி மூடப்படும் என்று மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் ரத்னாயக்க அறிவித்திருக்கிறார்.

இதனால் பாதயாத்திரை மேற்கொள்ளும் இந்து அடியார்கள் குழப்பமடைந்துள்ளனர்.

குறித்த நான்கு நாட்களில் காட்டைக் கடந்து கொடியேற்றத்திற்குச் செல்ல முடியாது. சாதாரணமாக ஆறு நாட்கள் தேவை. எனவே இந்த நாட்குறைப்பு திட்டமிட்ட ஒரு சதியாகக் கூட இருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்தக் காலத்தில் இப் புனித யாத்திரை பக்தி பூர்வமாக கொடியேற்றத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னரே திறக்கப்பட்டு எந்த அன்னதானமோ நீர் விநியோகமோ இல்லாது சிறப்பாக இடம்பெற்று வந்திருக்கிறது. சுமார் 20 நாட்கள் காட்டுப் பாதை திறந்திருக்கும்.

ஆனால் தற்போது செலவைக் பொறுத்து திறக்கப்படும் நாட்கள் தீர்மானிக்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலை அதுவும் மொனராகலையில் ஒரு திகதி அம்பாறையில் ஒரு திகதி. இதற்காக லாகுகலை பிரதேச செயலகம் நிதி சேகரிக்கின்றது . நீர் வழங்கலுக்காக இன்னும் சில தொண்டு அமைப்புகளும் நிதி சேகரிக்கின்றன. என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியாமல் உள்ளது. "கூட நாட்கள் திறந்தால் செலவு அதிகம்.நாங்கள் மூன்று நாட்களில் சென்றிருக்கிறோம்" என்று கதிர்காமக் கூட்டத்தில் ஓர் அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

மொத்தத்தில் இம்முறை இவ்வாறாக முரண்பாடு ஏற்பட்டுள்ளமை எதிர்காலத்தில் இப் பாதயாத்திரையை முடக்கும் செயற்பாடாக இருக்கலாமோ என இந்துக்கள் அச்சப் படுகின்றனர்.

ஏலவே, இத் திகதி   ஜூலை 1 ஆம் திகதி என மொனராகலையில் தீர்மானிக்கப்பட்டிருந்ததது. பின்னர் லாகுகல பிரதேச செயலகத்தினால் அது ஜூலை 2 ஆம் திகதி என உகந்தைக் கூட்டத்தில் கூறப்பட்டது.

இதனை காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சபையில் எழுந்து "இக்காலம் அறவே போதாது .அது ஒரிருநாள் முந்தி மாற்றப்படவேண்டும்.யாத்திரீகர்களின் நலன்கள் கட்டாயம் பேணப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்ததன் பலனாக  இத் திகதி இம் மாதம் 30 ஆம் திகதி என மாற்றப்பட்டமை தெரிந்ததே.

உகந்தை மற்றும் கதிர்காமம்  முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம்  ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 22  திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

வரலாறு..

2000 ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியர் புலஸ்தியர் போகர் உங்க பல சித்தர்கள் முனிவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை இன்று பல ஆயிரக்கணக்கான மக்களால் தொடரப்பட்டு வருகின்றது.

கதிர்காம காட்டுப் பாதை மொத்தம் 56 மைல்கள் ஆகும்.

உகந்தையிலிருந்து ஐந்து மைல்தூரத்தில் வாகூரவட்டை .பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு. 12 மைல் தூரத்தில் நாவலடி. பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை. 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு. 8 மைல் தூரத்தில் கட்டகாமம். அடுத்து 8 மைல் தூரத்தில் கதிர்காமம் மொத்தமாக காட்டுப்பாதை 56 மைல்களை உள்ளடக்கியது .  சாதாரணமாக 

சுமார் 6 நாட்கள் இந்த காட்டுப் பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X