2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

அரசுகள் தலையிடாக் கொள்கை

R.Tharaniya   / 2025 மார்ச் 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும். கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தி மீன்களை அள்ளும் இழுவை மடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித் தொழிலாளர்களே. அந்த செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

இந்திய மீனவர்கள் நமது நாட்டுக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இந்தியாவின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அறிந்திருக்கின்றனர் என்று  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை  புதிய அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற ஆரம்பித்ததல்ல. மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற பிரச்சினையாகும்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழைவதும், அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களுடைய உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதும், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதும், தண்டனை வழங்கப்படுவதும், விடுவிக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறைந்தபாடுமில்லை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வந்ததுமில்லை. இந்தநிலையில், கடந்த வாரத்தில் இந்திய இலங்கை மீனவர் சங்கத்தினர்களுக் கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படடுள்ளது. இருந்தாலும், இரு தரப்பினரும்  இப்பிரச்சினைக்கான தீர்வு அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படக்கூடியது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இருந்தாலும், கடந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் முதல் உத்தியோகபூர்வ விஜயத்தில் புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் மீனவர் பிரச்சினையை ‘முக்கியமானது’ என அடையாளம் கண்டிருந்தனர். மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வுகாண வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆனால், மீனவர் பிரச்சினை விடயத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் இனி பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் டிசெம்பர் இறுதியில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நிறுத்தப்படமாட்டாது எனவும், தொழில்நுட்பம், தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல் தொடரும் என்றும் அவர் தெரிவித்ததற்கமைய இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகக் கொள்ளலாம்.

ஆனால், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இராஜதந்திர மட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல. இராஜதந்திர ரீதியில் எவ்வளவு விவாதித்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்திய மீனவர்கள் வடக்குக் கடலில் மீன்பிடிப்பது குற்றவியல் ஆக்கிரமிப்பு போன்ற நிலைப்பாடுகள் இலங்கையின் அமைச்சு வட்டம் வரையில் இருக்கின்ற நிலையில் இரு நாட்டு அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைக்குச் சாத்தியமிருக்கிறதா? என்பது கேள்வியானதே.

எது எவ்வாறானாலும், எங்களின் கடல் வளங்களையும், மீனவர்களையும் பாதுகாக்க இந்த விடயத்தில் எப்போதும் தலையீடு செய்து கொண்டுதான் இருப்போம் என்கிற நிலைப்பாட்டில் இலங்கை அரசும், ஏதோ நடப்பது நடக்கட்டும். நமது மீனவர்களைக் கட்டுப்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகி அரசுக்கெதிரான சிந்தனையை ஏற்படுத்தி விடும் என்ற முடிவில் இந்திய அரசும், சுமுகமான மீன்பிடிக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்திய மீனவர்களும் இருக்கையில் முரண்பாடே மிஞ்சும்.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையில் இருக்கும் தாண்டிய மீன்பிடி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசும் தமிழ்நாட்டு அரசும் தீர்வைக் காண்பதற்கு  முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்த முயற்சி இலங்கை நாட்டின் இறமை, ஆட்புல ஒருமைப்பாட்டினைப் பாதிக்காத வகையில் இருந்தால் சரி.

1921ஆம் ஆண்டு இந்திய - இலங்கை பிரிட்டிஷினால் செய்து கொள்ளப்பட்ட மீன்பிடி ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்குப் பாக்கு நீரிணையில் அதிக கடல்பகுதியும், இலங்கை மீனவர்களுக்கு குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது. அதில் கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகள் இந்தியாவுக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகள் இலங்கைக்கும் என பிரிக்கப்பட்டன.

1974இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமாகியது. இதனால், தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி, இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளது.

இருந்தாலும், பாக்கு நீரிணைப் பகுதியில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனாலேயுமே பிரச்சினைகள் எழுகின்றன. இந்திய இலங்கை மீனவர்களிடையே இருக்க வேண்டிய ஒற்றுமை சீர்குலைவுக்கும் இதுவே காரணம். பாக்கு நீரிணை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இழுவை வலையைப் பயன்படுத்தக்கூடாது என்பது  இலங்கை மீனவர்களின் ஒரு கோரிக்கை.  

இழுவைப் படகுகளின் செயற்பாட்டினால், இலங்கைக் கடற்பரப்பிலுள்ள மீனும் பிற வளங்களும் அழிகின்றன. அதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. நீண்டகாலத்தில் எதிர்கால மீன்பிடியே அழியவேண்டி ஏற்படலாம் என்பது அச்சமே. ஒவ்வொருவரும் தம் பக்கமே நிற்பர் என்பது போல் இந்திய அரசும், தமிழ் நாட்டு அரசும் தமிழக மீனவர்களின் பக்கமாகவே இருந்து விடுகின்றன. இதனால், பாதிக்கப்படுவது இருதரப்புமே என்பதுதான் உண்மை.

கடந்த வாரத்தில் வவுனியாவில் நடைபெற்ற இந்திய-இலங்கை மீனவர் சங்க உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் கூட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவேளையில், கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் வாடும் இந்திய மீனவர்களைப் பார்வையிடுதலுடன் தான் நடைபெற்றிருக்கிறது.

தீர்க்கப்படாமல் இழுபட்டுச் செல்லும் இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருந்தாலும், இழுவை மடிகளைக் கொண்ட ரோலர் படகுகள் கடல் வளத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதனை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றிருக்கையில், தீர்வு எவ்வாறு கிடைக்கும் என்பதுதான் இந்த இடத்தில் சிக்கலானது. இந்தச் சிக்கல் பார்த்தும் பாராமல் தொடருமா? அல்லது ஓயுமா? என்பது பதிலில்லா தொடரே.

இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம், மீன்பிடிப் பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டங்கள்,  போராட்டங்கள், அறிக்கைகள், ஊடக சந்திப்புக்கள் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் எல்லை மீன்பிடிப் பிரச்சினை தீர்க்கப்படாதா என்ற சந்தேகம் ஏற்படுவதற்குத் தாமதிப்பும் இழுத்தடிப்புகளுமே காரணமாக இருக்கிறது.

இந்தியா இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வை முன்வைக்கும் என்று எல்லோரும் எண்ணினாலும், தமிழக அரசும் பல வழிகளிலும் இந்திய மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசை கோரினாலும் இந்திய மத்திய அரசாங்கமானது வருடத்தில் குறிப்பிட்ட அளவான நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோருகிறதே தவிர ஏதும் நடைபெறவில்லை.

ஆனாலும், இந்தியா கைக்கொள்ளும் அரசுகள் தலையிடாது மீனவர்களே தம் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வுக்கு வரட்டும் என்ற நிலைப்பாட்டைதான் நாம் விளங்கி நடந்து கொள்ளவேண்டும். இல்லையேல் இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படப்போவதில்லை. அது தவிர, எல்லை தாண்டலை ஒரு குற்றமாகக் கொள்ளாது கைதுகளை விடுத்து ஏதோ நடக்கட்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேண்டும்.

2025.03.31


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X