-எல்.தேவ அச்சுதன்
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகளின் எண்ணக்கருவில் உருவான 'மொபைலா மொபைலா' குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பெண்கள் தங்கள் சாதனையினை வீட்டுக்குள் மட்டுப்படுத்தாமல் சர்வதேச ரீதியில் வெளிக்கொணரவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக சிறந்த எண்ணக்கருவைக்கொண்டதாகவும் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல வரவேற்பனையும் இந்த குறுந்திரைப்பட வெளியீடு ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் திருமதி கனசிங்கம் தலைமை வகித்தார். இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி கலந்துகொண்டு சிறப்பித்தார். இதன்போது பிரதம அதிதிக்கு பாடசாலை பாடசாலை அதிபர் திருமதி கனசிங்கம் இறுவெட்டை வழங்கி வெளியீட்டினை ஆரம்பித்துவைத்தார்.
இந்த நிகழ்வில் திரைப்படம் தொடர்பில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் செல்வி சாரூனி இந்திரஜித் உரையாற்றினார். இந்த திரைப்படத்தின் இசையானது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இசைத்துறையில் மகுடம் சூட்டிவரும் சஞ்சித் லக்ஸ்மன் இந்த குறுந்திரைப்படத்துக்கு இசையூட்டியுள்ளது சிறப்பாகும்.
அத்துடன் இந்த திரைப்படத்தில் மிகவும் சிறந்த முறையில் ஒளிப்பதிவு இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஒரு திரைப்படத்துக்கு தேவையான ஒளிப்பதிவுகளை சிறந்த முறையில் அவர்கள் செய்துள்ளது அவர்களுக்கு மேலும் ஒரு பலமாகும். இதேபோன்று சிறந்த படத்தொகுப்புடன் நல்ல கூட்டணியாக இந்த குறுந்திரைப்படம் வெளிவந்துள்ளமை எதிர்காலத்தில் நல்ல படைப்புகள் பெண்களிடம் இருந்து வெளிவரும் என்ற செய்தியை அனைவருக்கும் வழங்கியுள்ளது.
