2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இலக்கிய சந்திப்பை புறக்கணிக்க கோரிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 16 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள 41ஆவது இலக்கிய சந்திப்பை தமிழ்பேசும் படைப்பாளிகள் புறக்கணிக்கவேண்டும் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும் வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளருமான சன்முகலிங்கம் சஜீவன் கோரிக்கை

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

'வன்னியில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் மனிதபடுகொலையின்  குருதி மணமும், அவலக்குரல்களும் தமிழர்களின் மனங்களைவிட்டு இன்னும் மறையாத நிலையில், தமிழர்களின் அரசியல், வாழ்வுரிமை, கலை, பண்பாட்டு கூறுகளை சிதைக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. 

தமிழ் அரசியல்வாதிகளை வைத்தே தமிழர்களிற்கு பிரச்சனையில்லையென்ற அபிப்பிராயத்தை உருவாக்குதல், தமிழர்களின் பாரம்பரிய பூமியான ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிரித்ததுடன், குடிசன பரம்பலை சிதைக்கும் வகையிலான சிங்கள குடியேற்றங்கள், பண்பாட்டு வேர்களின் மீது நிகழ்த்தப்படும் நுண்தாக்குதல்கள், மத தலங்களை அழித்தல் என எல்லா அடையாளங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

நமது வரலாற்று துயரம் என்னவெனில், இந்த நடவடிக்கைகளை தமிழ்மக்கள் மத்தியிலுள்ள சலுகை அரசியலிற்கு பலியான சிலரை வைத்தே அரசு நடத்தி கொண்டிருப்பதுதான். இதன் தொடர்ச்சியாக- தமிழர்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளிலும் அரசு கைவைத்துள்ளது.

இப்பொழுது தனது ஆதரவாளர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜுலை மாதத்தில் 41வது இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு அப்பாலான ஆட்சி,  ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் மீதான அடக்குமுறை என்பவற்றின் மீது போர்த்தப்படும் பல்வேறு திரைகளிலொன்றாகவே இந்த சந்திப்பையும் நோக்க வேண்டியுள்ளது.

ஏனெனில், யார்யாரெல்லாம் இலக்கிய சந்திப்பின் ஏற்பாட்டளர்களாகவும், அமைப்பாளர்களாகவும் உள்ளார்கள் என்பதிலிருந்து அதனை புரிந்து கொள்ள முடிகிறது. இதனை உறுதிசெய்யும் விதமாகவே நடைபெற்ற சம்பவங்களும் அமைந்துள்ளன.

சந்திப்பின் உள்ளடக்கம் இலங்கை அரசை ஆதரிப்பதாகும் என்ற உண்மையை வெளிப்படுத்தியபடி, ஒரு தொகுதி படைப்பாளிகள் குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர். தமிழ்தேசிய கருத்துக்களை பேசுவதற்கு அரச ஆதரவாளர்கள்
இடமளிக்கவில்லையென்பதும் அவர்களின் குற்றசாட்டுகளிலொன்று.

படைப்பாளிகள் தமது அனுபவங்களை எழுதுவதும் பேசுவதும் இலங்கையின் நிலவரங்களை பொறுத்தது. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட எழுத்தாளர் விழாக்கள் எல்லாமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவைதான்.

இலங்கையர்களினால் நடத்தப்பட்டவையல்ல. இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு வெளியிலிருந்து வருவதை அடியோடு நிராகரிக்கும் இலங்கையரசு, தமிழர்கள் இயல்பாக வாழ்கிறார்கள் என்பதை காட்டுவதற்கான விழாக்களை மட்டும் இறக்குமதி செய்வது வேடிக்கையானது.

யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கலை இலக்கிய விழாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆளுமைகளின் பங்களிப்பை கோராததன் மூலமும், உள்நோக்கமுடைய சந்திப்பென்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.

அரசின் திரைமறைவிலான இந்த முயற்சிகளை முறியடிப்பது ஒவ்வொரு படைப்பாளிகளினதும் வரலாற்று கடமை. போராட்டமென்பது களங்களிற்கு செல்வது மட்டுமல்ல. சில இடங்களிற்கு செல்லாமலிருப்பதும்தான்.

ஆகவே, இந்த நிகழ்வை புறக்கணிக்குமாறு தமிழ்பேசும் படைப்பாளிகளை கேட்டு கொள்கிறோம்' என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .