2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷத்தில் கண்டதும் சுட உத்தரவு

Editorial   / 2024 ஜூலை 21 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான பங்களாதேஷ  போராட்டத்தில் 130-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மீறி வெளியே வருவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்களிடம்உறுதிப்படுத்தினார்.

போராட்டத்துக்கு காரணம், அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் அந்நாட்டின் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவுதான். நீதிமன்றத்தின் அந்த உத்தரவு மாணவர்களைக் கிளர்ந்தெழச் செய்து வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டியுள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இடையில் ரத்துச் செய்யப்பட்டிருந்த இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ம் தேதி முதல் அங்கு போராட்டம் தொடங்கியது.

படைவீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால், அது தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என்று பங்களாதேஷத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலர், படைவீரர்களின் குடும்பத்தினர் என்ற பட்டியலின் உண்மைத் தன்மை குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்த இடஒதுக்கீடு முறையினால் நியாயமற்ற முறையில் சிலர் பலன் அடையக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமானது, தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று போராடும் வங்கதேச மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராகி இருக்கும் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்குதான் இந்த இடஒதுக்கீடு பயனளிக்கும் என்றும் மணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு சனிக்கிழமை (20)  வரை 105 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வளாகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தடைபட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .