2025 பெப்ரவரி 06, வியாழக்கிழமை

ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை

Freelancer   / 2025 ஜனவரி 24 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரம்ப் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து, சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், கடந்த 20ஆம் திகதி பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், குறிப்பாக பிறப்புரிமை அடிப்படையில் தானாக அமெரிக்க குடியுரிமை பெறும் நடைமுறையை இரத்து செய்யப்போவதாக, ட்ரம்ப் அறிவித்தார். 

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும்போது அவர்களுக்கு அங்கு குழந்தை பிறந்தால், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை கருத்தில் கொள்ளாமல், அந்த குழந்தைக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்ட நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் ட்ரம்ப்பின் அறிவிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில், இனி அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது. 

அதேபோல், அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்ட் இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இந்த உத்தரவு பெப்ரவரி 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், ட்ரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் ஆகிய மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ட்ரம்ப்பின் உத்தரவை அமுல்படுத்துவதற்கு 14 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ட்ரம்ப்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். 

அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் ட்ரம்பின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.AN

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X