2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குளிக்க மறுத்த பெண் கொலை: அரை மீசை காரனுக்கு 226 ஆண்டுகள் சிறை

Editorial   / 2024 ஜூலை 14 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளிக்க மறுத்த பெண்ணொருவரை கொலைச் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கு 226ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள சம்பவம், அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் பிரையன் ஸ்டீவன் ஸ்மித் (வயது 52). கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருடைய அலைபேசியை பெண்ணொருவர் திருடினார். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் இது தொடர்பாக பொலிஸில் எந்த புகாரும் அளிக்கவில்லை.

இதனிடையே அலைபேசியை திருடிய பெண் அதில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கண்டு அதிர்ந்து போனார். அதில் ஒரு வீடியோவில் ஸ்டீவன் ஸ்மித் ஒரு பெண்ணை சித்ரவதை செய்து, கொடூரமாக கொலை செய்த காட்சிகள் இருந்தன. அதுமட்டும் இன்றி கொலை செய்வதற்கு முன்பு அந்த பெண்ணை அவர் பாலியல் ரீதியில் துன்புறுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்களும் செல்போனில் இருந்தன.

இதையடுத்து, அந்த பெண் ஸ்டீவன் ஸ்மித்திடம் இருந்து திருடிய அலைபேசியை பொலிஸிடம் ஒப்படைத்து அதில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் குறித்து கூறினார். கொலை தொடர்பான வீடியோக்களை பொலிஸார் ஆய்வு செய்ததில் அலைபேசி திருடுபோவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ஸ்டீவன் ஸ்மித் இந்த கொலையை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

 இதையடுத்து, ஸ்டீவன் ஸ்மித்தை பொலிஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அலஸ்காவை சேர்ந்த கேத்லீன் ஹென்றி என்ற பெண்ணை கடத்தி ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார்.

அதுமட்டும் இன்றி ஏற்கனவே கடந்த 2018-ல் வெரோனிகா அபூச்சுக் (52) என்ற பெண்ணை கொலை செய்ததாக கூறி பொலிஸாரை அதிரவைத்தார்.

இதுப்பற்றி அவர் பொலிஸாரிடம் கூறுகையில், "வீடு இல்லாமல் வீதியில் தங்கியிருந்த வெரோனிகாவை மது மற்றும் உணவு கொடுப்பதாக கூறி எனது வீட்டுக்கு அழைத்து சென்றேன். பின்னர் அவரை குளிக்கச் சொன்னேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனால், கோபமுற்று அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன்" என்றார்.

ஸ்டீவன் ஸ்மித்தின் இந்த பரபரப்பு வாக்கு மூலம் அலாஸ்கா மட்டும் இன்றி அமெரிக்கா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக வீடு இல்லாமல் வீதிகளில் வசிக்கும் பெண்கள் தங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதுடன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர். பல தரப்பினரும் இந்த போராட்த்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதே போல் ஸ்டீவன் ஸ்மித்தால் கடத்தி கொலை செய்யப்பட்ட கேத்லீன் ஹென்றியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அவருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தினர். இதனிடையே, ஸ்டீவன் ஸ்மித் மீது இரட்டை கொலை, பாலியல் தொல்லை, ஆதரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித்தை குற்றவாளி என கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித்துக்கான தண்டனை விவரம் ஜூலை 13ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இரட்டை கொலை வழக்கில் அவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்பதற்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த கேத்லீன் ஹென்றி மற்றும் வெரோனிகா அபூச்சுக்கின் குடும்பத்தினர் கண்ணீர் சிந்தியபடி ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .