2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

தேர் சாய்ந்ததில் இருவர் பலி

Freelancer   / 2025 மார்ச் 23 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகா மாநிலம், பெங்களூரு புறநகர், ஆனேக்கல் தாலுகாவுக்கு உட்பட்ட ஹுஸ்கூருவில் உள்ள மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது, உயரமான தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில்,  இருவர் உயிரிழந்தனர்.

 இந்த கோவிலின் வருடாந்த  திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி, சனிக்கிழமை (22) தேரோட்டம் நடைபெற்றது. 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

அம்மன் தேரை தொடர்ந்து தொட்ட நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் வந்தன. இவை இரண்டும் சிறிய தேர்கள் ஆகும். 

அம்மன் வீற்றிருக்கும் 152 அடி உயர தேர் கட்டஹள்ளி கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது லேசாக அங்கு மழை பெய்தது. இதனால் பக்தர்கள் தேரை மெதுவாக இழுத்து வந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென தேர், அப்படியே சாய்ந்து விழுந்தது.

இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். அதில் பெண்களும் அடங்குவர். மேலும், தேர் விழுந்ததில் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதம் அடைந்தன.

இதையடுத்து, தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டனர். 

இதில் 14 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டும் (2024) இதேபோல் மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தின்போது, தேர் சாய்ந்து விழுந்து 2 பக்தர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X