2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

’சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர் நதியில் நீந்தி இந்தியாவுக்குள் ஊடுருவினார்’

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத், பங்களாதேஷில் இருந்து நதியை நீந்தி கடந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்துக்குள் ஊடுருவி உள்ளார் என்று, மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி இரவு, மும்பையில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். அந்த நபர், நடிகர் சயீபை கத்தியால் பலமுறை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கடந்த 19ஆம் திகதி மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து மும்பை பொலிஸார் கூறியதாவது: 

“நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர் பங்களாதேஷை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் (30) என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். குத்து சண்டை வீரரான இவர், பங்களாதேஷில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

“கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பங்களாதேஷில் இருந்து டவுகி நதியை நீந்தி கடந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளார். பின்னர்,மிசோரமில் இருந்து மேற்குவங்கத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜஹாங்கீர் ஷேக் என்பவரின் ஆதார் எண்ணை சமர்ப்பித்து சிம் கார்டு வாங்கியுள்ளார். 

“தனது பெயரை விஜய் தாஸ் என்று மாற்றி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி மும்பை வந்துள்ளார். பின்னர் மகாராஷ்டிராவின் தானே பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக பணியில் சேர்ந்துள்ளார்.

“கடந்த 15ஆம் திகதி நள்ளிரவு நடிகர் சயீப் அலிகான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் நுழைந்துள்ளார். 8 மாடிகள் வரை படிக்கட்டு வழியாக ஏறி உள்ளார். பின்னர் குழாய் வழியாக 12ஆவது மாடிக்கு ஏறி உள்ளார். அங்கு சயீப் அலிகான் வீட்டின் கழிவறை ஜன்னலை உடைத்து அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

“அங்கு நகை, பணத்தை திருட ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் முயற்சி செய்துள்ளார். எதுவும் கிடைக்காத நிலையில் அதிகாலை 2 மணி அளவில் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். குத்துச்சண்டை வீரர் என்பதால் சயீபை எளிதாக வீழ்த்தி உள்ளார். சுமார் 2 மணி நேரம் அடுக்குமாடி குடியிருப்பின் தோட்டத்தில் பதுங்கி இருந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

“குழாய் வழியாக ஏறி வரும்போது வேறு ஒரு நடிகரின் வீட்டின் கழிப்பறை கண்ணாடியை உடைக்க ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் முயற்சி செய்துள்ளார். அந்த வீட்டில் நாய் குரைத்ததால் அங்கிருந்து தப்பி நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

“கடந்த சில மாதங்களாக அமித் பாண்டே என்ற கட்டிட ஒப்பந்தகாரரிடம் ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் பணியாற்றி வந்துள்ளார். அந்த ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்களை பணியில் அமர்த்தும்போது அவர்களின் முழுமையான பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும் என்று கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X