2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஓநாய் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 02 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசத்தின் பஹ்ராச் மாவட்டம் மாஷி தாலுகாவில் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழையும் மர்ம விலங்குகள், மனித வேட்டையாடுகின்றன.

அவை, சிறு குழந்தைகளை இழுத்துச்சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளன. கடந்த, 45 நாட்களில் மட்டும் ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் கொன்றுள்ளன.

இந்நிலையில், மனித வேட்டை நடத்தும் மர்ம விலங்குகள், சாதாரண ஓநாய்கள் தான் என்று வனத்துறையினர் கூறினர். அவர்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, நான்கு ஓநாய்களை பிடித்தனர். ஆனாலும் மனித வேட்டை நின்றபாடில்லை. விலங்குகளின் தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில், இன்று (செப்.,02) ஓநாய் தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. மூதாட்டி ஒருவர் பலத்த காயமுற்றார்.

இதுதொடர்பில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் தெரிவிக்கையில், “மனிதர்களை வேட்டையாடி வந்த ஓநாய்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவற்றைப் பிடித்து விடுவோம்” என்று கூறினர்.

மேலும், ஓநாய்கள் பதுங்கியிருக்கும் ஆற்றங்கரையோர பகுதிகளில் சிறு குழந்தைகள் போன்ற வண்ண பொம்மைகளை வனத்துறையினர் போட்டு வைத்துள்ளனர்.

இது குறித்து மூத்த வனத்துறை அதிகாரி அஜித் கூறியதாவது: “குழந்தைகளின் சிறுநீரில் நனைத்த பொம்மைகள் ஆற்றங்கரைகளுக்கு அருகில் ஓநாய்கள் பதுங்கும் இடங்கள் மற்றும் புதர்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன. இயற்கையான மனித வாசனையை அவை கண்டுகொள்வதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இப்படித்தான் ஏற்கனவே 4 ஓநாய்களை பிடித்தோம்.

மீதமுள்ள ஓநாய்கள் தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக, இரவில் வேட்டையாடிவிட்டு, அதிகாலையில் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புகின்றன. பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் அவற்றை பொறிகளுக்கு அருகில் உள்ள வெறிச்சோடிய பகுதிகளுக்கு விரட்ட முயற்சிக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .