2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை

Freelancer   / 2025 மார்ச் 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில், கொலை வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷாகிதி கான் (வயது 33) என்பவருக்கே, இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 இவர், கடந்த 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகருக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் குழந்தை பராமரிப்பாளாரக பணிக்கு சேர்ந்தார்.

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், பணி வழங்கிய தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை குறித்த பெண்ணே பராமரித்து வந்தார். இதனிடையே, 2022 டிசம்பர் 7ஆம் தேதி குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே மாலை குழந்தை உயிரிழந்தது.

இந்த சம்பவத்தில் குழந்தையை, குறித்த பெண் கொலை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை 2023 பிப்ரவரி 10ஆம் திகதி அபுதாபி பொலிஸார் கைது செய்தனர்.

 பின்னர், அல் வஹாப் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில்  குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. மேலும், 2023 ஜுலை 31ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது ஷாகிதி கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, தனது மகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தடுத்து நிறுத்துமாறு ஷாகிதி கானின் தந்தை வெளியுறவுத்துறைக்கு பல முறை மனு கொடுத்துள்ளார். 

மேலும், கடந்த 14ஆம் திகதி ஷாகிதி கான் தனக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஓரிரு நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்றும் அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது குறித்து தகவலை தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அவரின் தந்தை டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த மனு, திங்கட்கிழமை (3) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ஐக்கிய அரபு அமீரக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாகிதி கானுக்கு பெப்ரவரி 15ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக பெப்ரவரி 28ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரக அரசு மத்திய அரசுக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், இது தொடர்பாக ஷாகிதி கானின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

“ஷாகிதி கானை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்தது. கருணை மனுக்கள் அனுப்புதல், பொது மன்னிப்பு வழங்க ஐக்கிய அரசு அமீரக அரசுக்கு வேண்டுகோள் உள்பட அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டோம். சட்ட ஆலோசகர்களையும் நியமித்து வாதாடினோம். ஆனால், குழந்தை கொலை தொடர்பான குற்றங்களும் அதற்கான சட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் கடுமையானவை. ஆகையால், மத்திய அரசு முயற்சித்தும் ஷாகிதி கானை காப்பாற்றமுடியவில்லை. 

“அவரின் இறுதிச்சடங்கு 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஷாகிதி கானின் குடும்பத்தினர் அபுதாபிக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருறது” என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .