2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘உணர்ச்சிக்கு அடிமையாகாமல் சாதூரியமாக செயற்பட வேண்டும்’

பைஷல் இஸ்மாயில்   / 2017 நவம்பர் 01 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மக்களை உணர்ச்சி அரசியலுக்குள் தள்ளி, அதன்மூலம் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் தலைமைகளைப் புரிவதற்கும், உணர்வுகளை ஓரம்தள்ளி, சாதூரியமாக சிந்தித்துச் செயலாற்றுவதற்குமான காலகட்டத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்” என, தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமாகிய எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

இதனை எம்மக்கள்  புரிந்துகொள்ளவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் நகர சபை தொடர்பில் இடம்பெற்று வருகின்ற ஹர்த்தால் தொடர்பாக, அக்கரைப்பற்றிலுள்ள அவரது கட்சிக் காரியாலயத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“சாய்ந்தமருது மக்கள், உணர்சிக்கு அடிமையாகாமல் சாதூரியமாகச் செயற்படல் வேண்டும். அப்போதுதான் எமது இலக்கை அடைந்துகொள்ளலாம்.

“நவீன காலத்தில் சனத்தொகை பெருக்கத்துக்கேற்ப அவர்களின் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு புதிய சபைகளை உருவாக்குதல் கட்டாயமானதாகும்.

“இதனை உணர்ந்ததால்தான் அமைச்சர் அதாஉல்லா, பல புதிய சபைகளை உருவாக்கியதோடு, பல தசாப்பத காலமாக சபை உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த மாதாந்தக் கொடுப்பனவை 5,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக மாற்றினார்.

“நாட்டில் அரசமைப்பு மாற்றம் நிகழும் இச்சந்தர்ப்பத்தில், எமது ஊர்வாத சண்டைகளை முன்னிறுத்தி, மக்கள் எண்ணங்களை திசைதிருப்பி ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களினதும் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள் என்பதை, எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

“அதேநேரம், எதிர்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன், ஊமையாக இருந்தாலும் தமிழ்த் தலைமைகளின் ஒப்புதல் இல்லாமல் சபைகளைப் பிரிப்பு என்பது சாத்தியமில்லை. காரணம் அங்கே,  கல்முனை வடக்கு தமிழ் சபையொன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.

“எனவே, அனைத்து மக்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்கி, ஏற்கெனவே வரையப்பட்ட எல்லைகளில் திருத்தம் செய்யவேண்டுமானால் ஒற்றுமையோடு முன்மொழிந்து உரிய தரப்பிடம் ஒப்படைத்தால் இலகுவாக தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .