2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

25 வருடங்களின் பின்னர் விசாக மடை

Menaka Mookandi   / 2015 ஜூன் 05 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை 25 வருடங்களின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது.

மேற்படி ஆலயத்தில் விசாக மடை செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியதை அடுத்து, ஆலயத்துக்கு செல்வதற்கான மக்கள் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (05) காலையில் ஒன்றுகூடினர்.

ஒன்றுகூடிய மக்களைப் பதிவு செய்த இராணுவத்தினர் அவர்களின் அலைபேசி, மற்றும் கமராக்களை வாங்கி வைத்த பின்னர், இராணுவ பஸ்களில் அவர்களை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். பொதுமக்களுடன் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அங்கிருந்த இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர்.

இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் இராணுவத்தினருடன் கலந்துரையாடி ஆலயத்தின் முக்கியத்துவத்தையும் அதன் வழிபாட்டு நிகழ்வை அனைவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறினர்.

அங்கிருந்த இராணுவத்தினர் தங்கள் உயர் அதிகாரிகளுடன் கதைத்துக்கூறுவதாகக் கூறினர். உள்ளே செல்லாமல் ஊடகவியலாளர் சுமார் 1 மணி நேரமாக உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் காத்திருந்தனர்.

அவ்விடத்துக்கு சென்ற பலாலி படைத்தலைமையகத்தின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ரஞ்சித் மல்லவராட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே செல்ல அனுமதி வழங்கி ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றார்.

ஆலயத்துக்கு செல்லும் வீதியையும் ஆலய சுற்றாடலையும் இராணுவத்தினர் துப்பரவு செய்துள்ளதுடன், ஆலயத்தில் பொதுமக்கள் தங்குவதற்கான கொட்டகை ஒன்றையும் அமைத்துள்ளனர். மேலும் குடிநீர், மருத்துவ வசதிகளையும் அங்கு ஏற்படுத்தியுள்ளனர்.

ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள சுமார் 200 பொதுமக்கள் அங்கு சென்றனர். பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலிகாமம் வடக்கு பிரசேத சபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலிகாமம் வடக்கு உபதவிசாளரும் மீள்குடியேற்றக் குழுத்தலைவருமான எஸ்.சஜீவன் ஆகியோர் சென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .