2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் சிறுவர்களின் நெருக்கடி நிலை தெற்காசியாவிற்கு ஒரு எச்சரிக்கையாகும்

S.Sekar   / 2022 செப்டெம்பர் 09 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் சிக்கல் தருகின்ற நிலையில், வறிய, மிகவும் பாதிப்புக்குள்ளான சிறுமியரும், சிறுவருமே அதன் பாதிப்பை அனுபவிக்கின்றனர்.

'துரித பொருளாதார வளர்ச்சி மற்றும் பெருகும் சுற்றுலாத்துறைக்காக பெயர் போன நாடான, இலங்கையானது, 1948 சுதந்திரத்திற்குப் பின்னரான மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவிக்கின்றது. அத்தியாவசிய உணவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாமையால் பல  குடும்பத்தினர் தமது வழக்கமான உணவைத் தவிர்த்து வருகின்றனர். சிறுவர்கள் பட்டினியுடன் தூக்கத்திற்குச் செல்கின்றனர். தீவிரமான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் தெற்காசியாவில் இரண்டாவது உயர் விகிதத்தைக் கொண்டுள்ள நாட்டில், எப்போது அவர்களுக்கான அடுத்த வேளை உணவு கிடைக்கும் என்பதில் உறுதியில்லை.

இலங்கையில் சுமார் இரண்டில் ஒரு சிறுவருக்கு ஏதாவது ஒரு வடிவிலான அவசர கால உதவி தேவையாக இருக்கின்றது. இரண்டு வருடங்கள் தடைப்பட்ட கற்றல் நடவடிக்கையினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள 4.8 மில்லியன் சிறுவர்களின் கல்வியானது, பாடசாலை வருகை தொடர்ந்தும் குறைவாக இருப்பதால் மேலும் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தில் உள்ளது. சிறுவர்களின் பாடசாலை நடவடிக்கைகள் தற்போதுள்ள நெருக்கடியினால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு முன்பதாக அவர்கள் உட்கொண்ட சூடான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான அடிப்படையான கற்றல் உபகரணங்கள் இல்லை. ஆசிரியர்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

உயர்ந்து செல்லும் பொருளாதார அழுத்தம் காரணமாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்பு தொடர்பான அதிக அறிக்கைகளை காண்கின்றோம். இலங்கையில் ஏற்கனவே 10,000இற்கும் அதிகமான சிறுவர்கள் நிறுவனம்சார் கட்டமைப்பின் பராமரிப்பில் இருக்கின்றனர். இதற்கான பிரதான காரணம் வறுமையாகும். சிறுவர்கள் வளர்வதற்கான மிகப் பொருத்தமான இடமாக அவை இருப்பதில்லை. ஏனெனில், அதில் குடும்ப உறவுக்கான சாத்தியம் இருப்பதில்லை. துரதிஷ்டவசமாக, தம்மால் பராமரிக்கவும், உணவளிக்கவும் முடியாத நிலையில் மேலும் பல குடும்பங்கள் தமது பிள்ளைகளை இந்த நிறுவனம்சார் கட்டமைப்புக்குள் சேர்ப்பதற்கு இந்த நெருக்கடி வழிவகுத்துள்ளது.

'தற்போதைய நிலை தொடருமாயின், இலங்கையில் சிறுவர்களுக்கான கடும் உழைப்பின் மூலம் பெறப்பட்ட நன்மைகளானது, சில சந்தர்ப்பங்களில் பழைய நிலைக்குச் செல்லும் அல்லது முழுமையாக அழிக்கப்படும் ஆபத்து நிலையில் உள்ளது.

'ஐம்பதிற்கும் மேற்பட்ட வருடங்களாக யுனிசெப் நிறுவனமானது இலங்கையில் செயற்பட்டு வருகின்றது. பங்காளர்களின் ஆதரவுடன் நாம், கற்றல் உபகரணங்களை வழங்குகின்றோம்,

முன்பள்ளி சிறுவர்களுக்கான உணவுகளை வழங்குகின்றோம் மற்றும் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் தாய்ப்பாலூட்டுபவர்களுக்கு மிக அவசியமான பணப் பரிமாற்றங்களை வழங்குகின்றோம்.

 'ஆனாலும், நெருக்கடி தொடர்வதனால், மேலும் தேவை உள்ளது.

'நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நாடு முயற்சித்து வரும் நிலையில் தீர்வின் முக்கிய இடத்தில் சிறுவர்கள் வைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான தொடர்ச்சியான கல்வி உறுதி செய்யப்படல் வேண்டும். அப்போது அவர்கள் தமது எதிர்காலத்திற்காக தயாராக முடியும் என்பதுடன், சிறுவர் தொழிலாளர், சுரண்டால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை ஆபத்திலிருந்து தம்மை காத்துக் கொள்ள முடியும். உயிர் ஆபத்துள்ள நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு மத்திய மற்றும் சமுதாயம்சார் சுகாதார சேவைகளுக்கு முன்னுரிமையளிக்கப்படல் வேண்டும்.

'இலங்கையில் நான் கண்டது, தெற்காசியாவின் ஏனைய நாடுகளுக்கான எச்சரிக்கைக் கதையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X