2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நான்கு பிள்ளைகளின் தாயார் வைத்தியசாலையில் உயிரிழப்பு

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு அதிகரித்த நிலையில், கணவனால் தலையில் கோடரித் தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார்.

குருநாகல் மொரகொல்லாகமல, அமுனகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் வலாகுலபொல முதியன்சலாகே ரூபா திசாநாயக்க என்ற 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி மாலை, கணவன் - மனைவிக்கு இடையில் சச்சரவு ஏற்பட்டுள்ளது. இதன்போது கோபமடைந்த கணவன், கோடரியால் மனைவியைத் தாக்கியுள்ளதுடன், 6 அங்குலம் அளவுக்கு மனைவியின் தலையில் கோடரியைப் பதித்துள்ளார்.

அதனையடுத்து, தலையில் பதிந்துள்ள கோடரியுடன் அயலவர்களால், பொல்பிட்டிகம் மாவட்ட வைத்தியசாலைக்கு குறித்த பெண் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து, குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோடரி தாக்குதல் காரணமாக, தலையில் இருந்து வலது கண் வரையான பகுதி கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குருநாகல் வைத்தியசாலையின் கண், காது, மூக்கு தொடர்பான விசேட வைத்தியர்கள் 8 பேர் அடங்கிய குழுவினர், பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர், கோடரியை அகற்றியுள்ளனர்.

சந்தேகநபரான கணவனால், கோடரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து 3 நாட்களுக்கு முன்னரும் பெண் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது, பெண்ணின் வலது கை உடைந்துள்ளது. அதற்கான சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இந்தக் கோடரித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோடரி தலையில் பதிந்த நிலையில், அதனை அகற்றாமல் வைத்தியசாலையில் சேர்ப்பித்த அயலவர்களுக்கு, வைத்தியர்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், கோடரியை அகற்றியிருந்தால், அந்த சந்தர்ப்பத்தின்போதே அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருந்ததாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி குறித்த பெண், நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கணவன், பொல்பிட்டிகம பொலிஸாரால் 21ஆம் திகதியன்றே கைதுசெய்யப்பட்டு, மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .