2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

‘கொழும்புக்கு முன்னுரிமை வழங்கவும்’

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகரம் முதல், தெகிவளை, மொரட்டுவை, கொலொன்னாவை நகரம் வரை  கட்டடங்களின் காடுதான் என்று கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், எனவே கொழும்புக்கு முன்னுரிமை வழங்குமாறும்  தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட கொரோனா இடர் குழுக்கூட்டம், கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (11) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கொழும்பில், மரம், செடி, கொடி பயிர்கள் இல்லை. ஒரு கிண்ணம் தண்ணீரையும் விலை கொடுத்தே வாங்க வேண்டும். அதேபோல், இங்கேதான் கொரோனா நோய் தாக்கமும் அதிகம் உள்ளது. மக்கள் ஊரடங்கால் சிறைப்பட்டுள்ளர்கள். ஆகவே  கொழும்பு மாவட்ட நகர பிரதேசங்களுக்கு  வாழ்வாதார நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

“வாடகை வீடுகளில் வசிப்போரையும் எந்தவித பாகுபாடுமின்றி வாழ்வாதார நிவாரணம் பெறுவோர் பட்டியலில் சேர்க்கும்படி நான் கூறினேன். இவை  கூட்டத்தில் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்வாதார நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களாக 408,650 பேர் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் சமுர்த்தி பெறுநர் உட்பட 103,788 பேருக்கே இதுவரையில் வாழ்வாதார நிவாரணம்  வழங்கப்படுகிறது என்றும் ஏனையோர அடையாளம் காணும் பணி நடைபெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும்,  நாளாந்த தொழிலாளர், சுயமுதலீட்டாளர், கடை சிப்பந்திகள், வேலையில்லாதோர் என்ற அடிப்படைகளில் வாழ்வாதார நிவாரணம் பெற வேண்டியவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது என்றும் இப்பணிகள் கிராம சேவையாளர்கள் மூலம் நடைபெறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தம்மை எக்காரணம் கொண்டும் கிராம சேவையாளர்கள் பதிவு செய்யவில்லை என எவரும் நினைப்பார்களேயானால், மாநகரசபை உறுப்பினர்கள் மூலம் தமது விபரங்களை விசேட விண்ணப்பங்கள் மூலம் வழங்கலாம் என்றும் இதற்கான உரிய அறிவுறுத்தல்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிரந்தரமாக வசிக்காத, வெளிமாவட்டங்களை சேர்ந்த 19,428 இருக்கின்றார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது என்றும் இவர்கள், 20ஆம் திகதி  வரை கொழும்பில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் தொற்று தொடர்பில் முதநிலையாளர்களாக ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள, கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் சுமார் 2,000 பேர்களுடன், இந்த வெளிமாவட்டகாரர்களும், முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் நேற்று சீனாவில் இருந்த வந்த சோதனை கருவிகளை முன்னுரிமை அடிப்படையில் இவர்களை,  சோதனை செய்ய பயன்படுத்துவதற்கு தாங்கள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இதன் பின்னரே வெளிமாவட்டக்காரர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்நிலையில், வெளிமாவட்டக்காரர்கள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறார்கள். எந்த ஒரு பொலிஸ் நிலையத்திலும் இப்படியான பதிவுகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டால், எம்மை தொடர்பு கொள்ளலாம்.  

“கொழும்பு நகரில், அத்தியாவசிய பொருள் விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு கிராம சேவகர்கள் பிரிவுகளிலும் குறிப்பிட்ட  தனியார் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X