2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

32 இலட்சம் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டும்: மனோ

Gavitha   / 2015 மே 05 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வாழும் 32 இலட்சம் தமிழர்களையும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா அரசு கவனத்தில் எடுத்து பாதுகாக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுடன் வாழும் 18 இலட்சம் முஸ்லிம்களும் 150 இலட்சம் சிங்களவர்களும் பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றார்கள்.

இலங்கையில் வடக்குக்கும் தெற்குக்கும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் நமது கட்சி எப்போதும் உறவு பாலமாக செயலாற்றுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கைக்கு வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் இல. கணேசனிடம் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகர் இல. கணேசன் மற்றும் தமிழக துணைத்தலைவர் சக்கரவர்த்திக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், உப செயலாளர் சண். குகவரதன், பிரசார செயலர் குருசாமி, ஊடக செயலர் பாஸ்கரா ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு விட்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த மன்மோகன் சிங் அரசாங்கத்தில், இலங்கை தொடர்பான கொள்கை இந்திய தேசிய நலனுக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனுக்கும் இலங்கை-இந்திய நீண்டகால நட்புறவு கோட்பாடுகளுக்கும் அப்பால் சென்று சில தனிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருகின்றது.

எனவே, இன்று இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள அதேவேளையில், இந்தியாவிலும் புதிய அரசு ஆட்சியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதேவேளை இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியில், இலங்கை தொடர்பான நீங்கள் முக்கிய பாத்திரம் வகிப்பதும் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.

இது சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசு அல்ல. இது நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி அரசு என்ற செய்தியும் இரண்டு ஆட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடும் இன்று இலங்கையில் அனைத்து தரப்பினராலும் புரிந்துக்கொள்ளப்பட்ட விடயங்கள் என்பதை உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இன்றைய இலங்கை அரசு கடந்த கால மஹிந்த அரசுடன் பிரதான இரண்டு அடிப்படைகளில் வேறுபடுகிறது. ஒன்று, கடந்தகால தமிழர் எதிர்ப்பு அரச பயங்கரவாத நிலைப்பாடு இன்று இல்லை. இரண்டாவது, அரசு மட்ட இந்திய எதிர்ப்பு இன்று இல்லை.

ஆகவே, நாட்டில் மைத்திரி-ரணில் ஆட்சி தமிழர்களின் மத்தியில் கடந்த காலங்களை ஒப்பிடும் பொழுது ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நாம்  அவசரகதியில் மாற்றங்களை திணித்து மீண்டும் மஹிந்த தலையெடுக்க இடம்கொடுக்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் சொல்லொணா போர்க்கால துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்களின் தேசிய அரசியல் அபிலாஷை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்க பாரத அரசு துணையிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .