2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

'அராஜகத்துக்கு எதிராக எழுந்திட முடியாத கோழைகளாக இருப்பது வெட்கம்'

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ,18ஆவது நாளாகத் தொடர்கிறது. அரசியல் தலைவர்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போராட்டம் கூர்மையடைந்தும் வருகிறது.

தனது சொந்த பூமியில் அடிமைகளாகவும்   அகதிகளாகவும்,  கைதிகளாகவும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் பலஸ்தீன் மக்கள் உள்ளார்கள்.

மத்திய கிழக்கில்  நான்கு பக்கமும் முஸ்லிம்களால் சூழப்பட்ட நாடுகளைக் கொண்டிருந்தும்  சின்னஞ் சிறிய இஸ்ரேலின் அராஜகத்திலிருந்து இந்த மக்களைக் காப்பாற்ற திராணியற்ற சமூகமாக முஸ்லிம் சமூகம்   இருப்பதையிட்டு, நாம் வெட்கமும் வேதனையும் பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்தார்.

பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து,  கொழும்பு - பலஸ்தீன் தூதுவராலயத்தில்   கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, இஸ்ரேலிய சிறைகளிலுள்ள 1,500 கைதிகள், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மே மாதம் 3ஆம் திகதி, பலஸ்தீனின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர்.

இஸ்ரேலின் அராஜகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டி, இந்த அநீதிக்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்க முஸ்லிம் நாடுகள் முன்வர வேண்டும்.

1948 முதல் ஒரு மில்லியன் பலஸ்தீனர்கள்  இஸ்ரேலிய இராணுவத்தால்  கைது செய்யப்பட்டிருப்பதாக தரவுகள் கூறுகின்றன. இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை துச்சமாக மதித்தே இந்த அராஜகங்களை நடத்தி வருகிறது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் வாடி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை கூட இந்த அநீதிகளைக் கண்டும் காணாது போல் செயற்பட்டு வருகிறது.

முஸ்லிம் உலகின் ஒற்றுமையே இந்த அநீதிகளை அழிக்கக் கூடிய ஆயுதமாகும். பலஸ்தீன் மக்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் பங்கு கொண்டு அவர்களின் உண்மையான விடிவுக்கு உழைப்பது மனித நேயத்தை விரும்பும் அனைவரினதும் கடமையாகும் என்றும் முஜீபுர் றஹ்மான் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .