2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மாடறுப்பு விவகாரத்துக்கு உரமூட்டப்பட்டுள்ளது

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்கள் மீது காழ்புணர்வுகொண்டிருக்கும் இனவாதிகள், கடந்த காலங்களில் எழுப்பிய கோசங்களில் பிரதானமாக மாடறுப்பு விவகாரம் இருந்து வந்தது. முஸ்லிம்களை எதிர்க்க, இன முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக மாடறுப்பு விவகாரத்தை அவர்கள் பூதாகரமாக்கினர். எனினும், ஜனாதிபதியின் பேச்சு அந்த விவகாரத்துக்கு உரமூட்டுவதாய் அமைந்துள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இவ்விவகாரம் ஓரளவு தனிந்திருந்தது. மீண்டும் அதற்கான ஆரம்ப புள்ளியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வைத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்த முஸ்லிம்கள், நாட்டில் சகல மக்களினதும் கலாசாரம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தனர்.

நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு சிறுபான்மை மக்கள் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர். அத்துடன், இதில் முஸ்லிம்களின் பங்கனது மகத்தானது எனலாம். இந்நிலையில் மாடறுப்பு குறித்த ஜனாதிபதியின் கருத்து முஸ்லிம்களை அவமதிப்புக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றது. அத்துடன், முஸ்லிம்களின் உணவு உண்ணும் உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் மனவேதனையடைந்துள்ளனர்.

மாடு அறுப்பது மாத்திரம் மிருக வதை என பார்க்கின்ற ஜனாதிபதி, ஆடு, கோழி மற்றும் பன்றி போன்றவற்றை அறுப்பதற்கு தடை விதித்திருக்கலாமே. அத்துடன், பெரஹெராவிற்கு யானைகளை பயன்படுத்துவதும் மிருக வதையாகவே பார்க்கவேண்டும். 

அதுமட்டுமல்லாது நாட்டில் மீன்பிடி தொழிலையே தடை செய்ய வேண்டும். இவையெல்லாம் மிருக வதையாகப் பார்க்காத ஜனாதிபதி மாடறுப்பை மாத்திரம் மிருக வதையாக ஏன் குறிப்பிட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.

இனவாதிகளின் வேட்கைகளுக்கு இடமளிக்காது நாட்டில் சகல மக்களினது உரிமைகள் குறித்தும் ஜனாதிபதி சிந்திக்க தலைப்பட வேண்டுமே தவிர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்துக்கு செல்வதற்கான அத்திபாரங்கள் இடப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .