2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நகரசபை செயலாளரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 மார்ச் 14 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகர சபையின் செயலாளரை இடமாற்றி, புதிய செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை (14) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதும் புத்தளம் நகர சபையின் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாகவும், நகர சபையின் செயலாளர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் வரிப்பணத்தை தவறாது பெற்றுக்கொள்கின்ற புத்தளம் நகர சபை, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில்லை என்றும் கழிவுகள் அகற்றல், வீதியோர வடிகான்கள் துப்பரவு செய்தல், வீதியோர மின் குமிழ்கள் திருத்தம் உள்ளிட்ட பல வேலைகள் முன்னெடுக்கப்படாமல் உள்ளமை குறித்து இதன்போது குறிப்பிடப்பட்டது.

புத்தளம் நகர சபையின் செயலாளரின் அசமந்த போக்கு குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள போதிலும், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிடும் அதிகாரிகள், பின்னர் எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் தொழிலதிபர் அலிசப்ரி, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதையடுத்து, புத்தளம் மாவட்டச் செயலாளருடனும் இது குறித்து கலந்துரையாடினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக, புத்தளம் மாவட்டச் செயலாளர் வாக்குறுதி அளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .