2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குழிகளை மூடுமாறு கோரி பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்காவல் பிரதேசத்தில் மணல் அகழ்ந்தெடுப்பதற்காகத் தோண்டப்பட்ட பாரிய குழிகளை உடனடியாக மூடுமாறு கோரி, பிரதேசவாசிகள், இன்று திங்கட்கிழமை (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த செம்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, உடங்காவல் பிரதேசத்தில் தோண்டப்பட்டிருந்த 10 ஏக்கர் பரப்புடைய நீர் நிறைந்த குழியில் நீராடச் சென்ற தோப்பு ரோமன் கத்தோலிக்கத் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 8 இல் பயிலும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து உடங்காவல் பிரதேசத்தில் கொந்தராத்துக்காரர்களால் மணல் அகழ்வதற்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழிகளை உடனடியாக மூட வேண்டும் என்று பிரதேச மக்கள், அதிகாரிகளை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள், உடங்காவைப் பிரதேசத்திலிருந்து பேரணியாகச் சென்று நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் கொச்சிக்கடை மகா ஓயா பாலம் அருகில் வந்து வீதியை மறித்து கோசங்களை எழுப்பினர்.

இதன் காரணமாக வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு கொச்சிக்கடைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுதொடர்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பிரதேசவாசிகள் கூறியதாவது,

மாணவர்கள் இருவரும், நீரில் மூழ்கி உயிரிழந்த பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரிய குழி, 2004ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தோண்டப்பட்டதாகும். தோண்டப்படும் குழிகள் பின்னர் மூடப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது.

ஆயினும், அந்தக் குழிகள் மூடப்படாததன் காரணமாக நீர் நிறைந்த பாரிய குழிகள் பிரதேசத்தில் உள்ளன. இந்தக் குழிகள் 20 முதல் 100 அடிக்கும் மேற்பட்ட ஆழமுடையதாகும்.

இந்த நீர் நிறைந்த குழிகளில் விழுந்து இதற்கு முன்னர் மூவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரதேசத்தின் சூழல் மாசடைவதற்கும் இந்தக் குழிகள் காரணமாக அமைந்துள்ளன. எனவே, இந்தப் பரிச்சினைக்கு உடனடியாகத் தீர்;வு கிடைக்க வேண்டும்' என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .