2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

738 ஹெக்டேயரில் படைப்புழுத்தாக்கம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட  738 ஹெக்டேயர் சோளம் செய்கையில், படைப்புழுவின் தாக்கம் காணப்படுவதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “இம்முறை பெரும்போக விவசாயத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான இலக்கைக் கொண்டு விவசாய நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“இம்மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,214 ஹெக்டேயர் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 738 ஹெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கத்துக்கான பரவல்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. படைப்புழுத்தாக்கம், இளம்பருவப் பயிர்களில் அதிகமாகக் காணப்படுவதுடன், முதிர் பருவ பயிர்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

“40 தொடக்கம் 61 சதவீதமான தாக்கங்கள் இலைகளிலும், பூக்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த பீடைமுகாமைத்துவத் திட்டம், இயற்கை முறை மற்றும் இரசாயன கிருமி நாசினி விசிறல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

“மேலும் விவசாயத் திணைக்களத்தால் படைப்புழுத்தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வைரஸ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பௌலிஜன் எனும் திரவ மருந்தாகும். இதனை நோய்த்தாக்கமுள்ள பயிர்களில் புழுக்களில் படும்படியாக விசிறப்படும்போது, அதனை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும்.

“இதுதவிர, இந்நோய்த்தாக்கத்தை ஆய்வு செய்து முற்றாகக் கட்டுப்படுத்த கிழக்குப் பல்கலைக்கழக பூச்சியியலாளர் கலாநிதி நிரஞ்சனா, கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய பூச்சியியலாளர் கலாநிதி அரசசேகரி, பத்தளகொட நெல் ஆராச்சி நிலைய பூச்சியியலாளர் கலாநிதி சொர்ணா ஆகியோர் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .