2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வசதியற்ற மக்களுக்கு 3,200 மலசலகூடங்கள்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி, கனகராசா சரவணன்    

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூட வசதியற்ற வறியமக்களுக்கு 360 மில்லியன் ரூபாய் செலவில் 3,200 மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையை, பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சால், 2021ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் இன்று (24) நடைபெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து வெளியிடுகையில், இவ்வாண்டு 25 மில்லியன் ரூபாய் செலவில் ஆடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை குறுகிய காலத்தினுல் நடைமுறைப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், மேலும் இம்மாவட்டத்தில் 17,723 மாலசலகூடத் தேவை காணப்படுவதாகத் தெரிவித்தார். 

இவற்றில் 2021ஆம் ஆண்டு 3,200 மலசல கூடங்களை 360 மில்லியன் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்க அனுமதியும் சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளதாகவும் இத்திட்டத்தை 9 மாதங்களில் நிறைவுறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், இவற்றைப் பெறும் பயனாளிகளின் விவரங்களை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மாவட்டச் செயலாளர் ஊடாக அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு, அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ். அமலநாதன், பிரதேச செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். 

இத்திட்டத்துக்காக இந்திய அரசாங்கத்தால் 300 மில்லியன் ரூபாயும், இலங்கை அரசால் 60 மில்லியன் ரூபாயாமாக 360 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, இஞ்சி, உழுந்து, பழவகை உற்பத்திக்கான உதவிகள், தொடர் மாடி வீட்டுத்திட்டங்கள், கோழி வளர்ப்புக்கான நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டங்கள் போன்றவற்றை எதிர்வரும் ஆண்டில் தமது அமைச்சால்  அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .