2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

அமெரிக்க தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்

Freelancer   / 2023 நவம்பர் 15 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், புதன்கிழமை (15) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். அவருடன்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் வருகை தந்திருந்தார்.

மேலும் மட்டக்களப்பு சரவணா வீதியில் அமெரிக்கா அரசினால் நிறுவப்பட்டுள்ள அமெரிக்கன் ஹப் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார்.

அமெரிக்க தூதரகம் மற்றும் ட்ரீம் ஸ்பேஸ் அகடமி ஆகியவற்றிற்கிடையிலான ஒரு கூட்டு முயற்சியாக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படும் இந்த iHub கிழக்கு மாகாண இளைஞர்களை வலுப்படுத்துதல், அறிவுப் பரிமாற்றத்தைப் பேணி வளர்த்தல் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 மட்டக்களப்பில் உள்ள அமெரிக்க iHub இனைத் தவிர, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் ஊடாடும் American Spacesகளை  அமெரிக்கத் தூதரகம் கொண்டுள்ளது.

“இலங்கையிலுள்ள எமது ஐந்தாவது American Space ஆகிய மட்டக்களப்பு iHub, கிழக்கு மாகாணத்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக இருப்பதுடன் நாடு முழுவதுமுள்ள இளைஞர்களிடையே தொடர்புகளையும் வளர்க்கும்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.

 “இந்த ஆண்டு எமது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளின் 75 ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகையில், இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, புத்தாக்கம், தலைமைத்துவம், கல்வி மற்றும் ஒத்துழைப்பை பேணிவளர்த்தல் போன்ற விடயங்களில் ஒரு பெரும் நம்பிக்கையை இந்நிலையம் வழங்குகிறது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த மற்றும் உறுதியான பங்காண்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அனைத்து மக்களும் சௌகரியமாகவும், உத்வேகமாகவும் உணரும் ஒரு இடமாக இது விளங்கும் என நான் நம்புகிறேன்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தகங்கள், டிஜிட்டல் வளங்கள், மல்டிமீடியா உள்ளடக்கங்கள் மற்றும் இணைய தரவுத்தளங்கள் உட்பட பலதரப்பட்ட இலவச வளங்களுக்கான அணுகலை வழங்குகின்ற புலமைசார் ஈடுபாட்டின் ஒரு மையமாக விளங்கும் வகையில் மட்டக்களப்பு iHub வடிவமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X