2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி கலந்துரையாடலில் பாரபட்சம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகள் குறித்தான கலந்துரையாடல்கள், திட்டமிடல்கள் எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்ததாக அமைந்திருக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ,  அதனைவிடுத்து ஒருதலைப்பட்சமான முடிவெடுப்புகளாக, நிகழ்ச்சி நிரல்களாக நடைபெறுவது கண்டிக்கத்தக்கதும் மாற்றியமைக்கப்படப்பட வேண்டியதும் எனத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஜனா எம்.பி, நேற்று (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தைப் பெறுத்தவரையில் அண்மைய நாட்களில் விவசாயம், கல்வி, பொருளாதார விடயங்கள் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை முறைப்படியானதாக நடைபெற்றிருக்கவில்லை. இது நடைமுறைகளை மீறும் செயலாகவே எம்மால் பார்க்கப்படுகிறது.

“அதேபோன்றே, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் மாவட்டம் சார்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை தனிப்பட்ட முறையில் மாவட்டச் செயலகத்தில் நடத்துவது தவறானதாகும். கூட்டங்களை நடத்தும்போது மக்கள் பிரதிநிதிகளையும், திணைக்களத் தலைவர்களையும் அழைத்தே கூட்டங்களை நடத்தவேண்டும். அதற்கு தற்போதைய கொவிட் -19 நலைமையைக் காரணமாகச் கூற முயலக் கூடாது.  

“தனிப்பட்ட அரசியல் நடத்துவதற்கான கூட்டங்களை தங்களுடைய அலுவலகங்களில் நடத்துவதனை விடுத்து, அதற்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லதாகும். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது அடாவடித்தனமானதாகவே கொள்ளப்படும்.

“நாட்டில் அரசாங்கமானது ஆளும் தரப்பு எதிர்த்தரப்பினரை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அதேபோன்று, நாடாளுமன்றத்திலும் எதிர்த்தரப்பினரைத் தவிர்த்து எந்தவொரு விடயமோ, பிரேரணையோ முன் நகர்த்தப்படுவதில்லை. மாவட்ட, மாகாணங்களும் அவ்வாறானதே.

“மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல், அழைப்பும் விடுக்காமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி, விவசாயம், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதும் தீர்மானங்களை எடுப்பதும் ஆரோக்கியமானதல்ல என்பதை மாவட்ட அரச நிர்வாகமும் மாவட்ட அபிவிருத்திக் குழுவும் புரிந்துகொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .