Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 மார்ச் 11 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் களம் ‘ஜெனீவா அரங்கை’ ஒவ்வொரு வருடமும் திறக்கும். அந்த அரங்கு, குறைந்தது இரண்டு மாதங்களாவது பல்வேறு அரங்காற்றுகைகளோடு நிறைந்திருக்கும்.
தொடர்ச்சியாகப் பலி எடுக்கப்படும் ஒரு சமூகமான தமிழ் மக்கள், நீதிக் கோரிக்கைகளோடு சர்வதேசத்தை நாடுவது ஒன்றும் தவறில்லை. அதுவும், ஈழத் தமிழர்களின் விவகாரம், சர்வதேச ஊடாடல் என்பவை, பெரும்பாலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் சுருக்கப்பட்ட நிலையில், ‘ஜெனீவா அரங்கு’ மேலெழுவது இயல்பானதுதான்.
ஒவ்வொரு வருடமும், இராஜதந்திரிகளுடனான சந்திப்புகள் என்ற புள்ளியில் திறக்கும் ஜெனீவா அரங்கு, அரசியல் கட்சிகளின் சந்திப்புகள், ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள், துரோகிப் பட்டம் சூட்டுதல்கள் என்ற அளவோடு மேலெழும்.
தாயகத்தில் மோதிக் கொண்டவர்கள், ஜெனீவாவுக்குப் படையெடுத்துச் சென்று, அங்கும் ஒருவரையொருவர் வசைபாடி ஓய்வார்கள். (கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகளால், ஜெனீவாவுக்கான பறத்தல், இந்த வருடம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது)
மற்றொரு பக்கத்தில், கருத்துருவாக்கிகள், புலமையாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் தரப்புகள், ஜெனீவா அரங்கைத் தங்களது மேதாவித்தனங்களைக் காட்டுவதற்கான களமாகப் பெரும்பாலும் முன்னிறுத்திக் கொள்ளும்.
ஊடகங்களின் நிலை என்பது, இந்த இரண்டு தரப்புகளின் பேட்டிகள், அறிக்கைகளால் இடங்களை நிரப்புவது என்கிற அளவுக்குள் சுருங்கி விடுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையால், இலங்கை விடயத்தில் எவ்வாறான தலையீடுகளைச் செய்ய முடியும் என்பது தொடர்பில், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல தெளிவு உண்டு.
குறிப்பாக, ஒரு நாட்டின் மீதான கண்காணிப்பு என்கிற அளவைத் தாண்டிய தலையீடுகளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் செய்ய முடியாது என்பதுதான், அந்த முகத்தில் அறையும் உண்மை ஆகும். ஆனால், அந்தக் கண்காணிப்பு என்கிற விடயம், சம்பந்தப்பட்ட நாட்டுக்கு, குறிப்பிட்டளவான அழுத்தம் என்பதையும் மறுக்க முடியாது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தனக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்று, இலங்கை அங்கலாய்ப்பதும் அதன் போக்கில்தான். அதனை விடுத்து, இலங்கையைப் பாரியளவில் தண்டிப்பதற்கான வாய்ப்புகள் அங்கு இல்லை. அதுபோல, இலங்கை மீதான சர்வதேச விசாரணை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல் போன்ற விடயங்களுக்கான சாத்தியப்பாடுகள் எப்படிப்பட்டது என்றால், அது கிட்டத்தட்ட பூச்சியத்துக்கு அண்மித்தது.
ஏனெனில், தற்போது வரையில், ‘உரோம் உடன்படிக்கை’யில் இலங்கை கைச்சாத்திடவில்லை. அதனால், சர்வதேச விசாரணைகளுக்கான வாய்ப்புகள் இல்லை. பாதுகாப்புச் சபையூடாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாணையொன்றுக்கு இலங்கையைப் பாரப்படுத்தல் என்பது, ஐ.நாவின் ‘வீற்றோ’ அதிகார நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் கைகளில்தான் தங்கியிருக்கின்றது. பாதுகாப்புச் சபைக்குள் வரும் ஒரு விடயம், இந்த நாடுகளில் ஒன்றால் நிராகரிக்கப்பட்டாலும் அது இரத்தாகிவிடும்.
மியான்மாரில், அண்மையில் இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆங் சான் சூசி உள்ளிட்ட ஜனநாயகத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். இராணுவச் சதிப்புரட்சிக்கு எதிராக, மியான்மார் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள். பெரும் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்.
எழுச்சி பெறும் போராட்டங்களால் நெருக்கடிகளைச் சந்திக்கும் இராணுவம், போராட்டங்களை ஆயுத முனையில் அடக்க நினைக்கின்றது. இதுவரையில், பல போராட்டக்காரர்கள் பொலிஸாரினதும் இராணுவத்தினதும் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த விடயம், ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு, கடந்த வாரத்தில் வந்தது. ஆனால், மியான்மாரில் நடப்பது உள்நாட்டு விவகாரம்; அதில் தலையீடுகள் தேவையில்லை என்ற அளவில், சீனா தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. அத்துடன், பாதுகாப்புச் சபை மியான்மார் விடயத்தை அப்படியே கைவிட்டிருக்கின்றது.
சிரியாவில் ஆயுத மோதல்கள் நீடித்த காலத்தில், பாதுகாப்புச் சபையில் தொடர்ச்சியாக, சிரியாவுக்கு எதிராகத் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், பாதுகாப்புச் சபையில், அந்தத் தீர்மானங்களுக்கு எதிராக, ரஷ்யா தொடர்ச்சியாக ‘வீற்றோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தது.
ஏன், 2009ஆம் ஆண்டு, இலங்கையில் இறுதிப் போர் வலுப்பெற்றிருந்த தருணத்திலும், பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் வந்தது. ஆனால், அது ஒரு தீர்மானமாக மாறுவதற்கு முன்னரேயே, இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்ட நாடுகளின் அழுத்தத்தால் விடயம் கைவிடப்பட்டது. இதுதான், பாதுகாப்புச் சபைக்குள் இருக்கும் நிலை.
பாதுகாப்புச் சபையிலுள்ள அனைத்து நாடுகளும், ஒன்றாக இணைந்து தீர்மானத்தை அங்கிகரிக்கும் அளவுக்கு, இலங்கை ஒன்றும் கேந்திர முக்கியத்துவமற்ற பிராந்தியத்திலுள்ள நாடு அல்ல.
இந்து சமுத்திரத்தில், இந்தியா என்கிற பிராந்திய வல்லரசைக் கண்காணிக்கும் தூரத்தில் இருக்கின்றது. இலங்கை போன்றதொரு தீவு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தேவையாக இருக்கின்ற நிலையில், இந்த நாடுகள் ஒவ்வொன்றும் தன்னுடைய நலனை முன்னிறுத்தி, இலங்கை விவகாரத்தைக் கையாளும். அதுதான், இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் நடந்து வந்திருக்கின்றது.
எதுவித இயற்கை வளங்களும் இல்லாத, பிராந்திய முக்கியத்துவம் இல்லாத ஆபிரிக்காவிலுள்ள சில நாடுகள் போலில்லை இலங்கை. ஆபிரிக்காவிலேயே இப்போது பல நாடுகளை, சீனா உள்ளிட்ட வல்லரசுகள் அபகரிக்கத் தொடங்கிவிட்டன. பில்லியன் கோடி டொலர்களில், இலங்கையில் முதலிட்டிருக்கிற சீனா, இலங்கையைத் தன்னுடைய ஒரு மாகாணமாகக் கருதும் நிலையே இப்போது இருக்கின்றது.
அப்படிப்பட்ட நிலையில், இலங்கையைப் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்வது என்பது, ஓர் அபத்தமான வாதம். அதை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக முன்னெடுக்க முனையும் தரப்புகள், அதன் மூலம் வல்லரசு நாடுகளின் தார்மீகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கலாம் என்கின்றன.
வல்லரசு நாடுகளிடம், எப்போது தார்மீகம் இருந்திருக்கின்றது? அவை, தங்களது நலன்கள் சார்ந்துதான் எப்போதும் செயற்பட்டு இருக்கின்றன. இந்த இடத்தில்தான், இராஜதந்திர ஊடாட்டங்களின் ஊடாக, வெற்றியை நோக்கிய பயணம் முக்கியத்துவம் பெறுகின்றது. அதைவிடுத்து, முட்டுச் சந்துகளில் முட்டிக்கொண்டு இருப்பதல்ல இராஜதந்திரம், புலமை ஆகியன.
தேர்தல் அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியல் சுருக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள், சிவில் சமூக இயக்கங்கள், கருத்துருவாக்கிகள், புலமையாளர்கள் என்று அனைத்துத் தரப்புகளும் ஊடகக் கவனம் பெறத் துடிக்கும் அரசியல்வாதியைப் போல செயற்படவே விரும்புகின்றன.
ஜெனீவா அரங்கு திறக்கின்ற ஒவ்வொரு வருடமும், கட்சிகளின் சந்திப்புகள், மக்கள் சந்திப்புகள், மாநாடுகள், ஊடக சந்திப்புகள், அறிக்கைகள், கட்டுரைகள் என்று எல்லா இடங்களிலும் மக்களின் உணர்வைத் தூண்டி, அதில் குளிர்காயும் அளவுக்கான பிரயோகங்களே அதிகளவில் வெளிப்படுத்தப்படுகின்றன.
அதன்போக்கில்தான், சர்வதேச விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்கிற விடயங்கள் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கான வழிவரைபடம் பற்றி, யாரும் பேசுவதில்லை. அப்படிப் பேசினால், முட்டுச் சந்துக்குள் சென்று சேர வேண்டியிருக்கும் என்பது, அனைவருக்கும் தெரியும். அப்படியான நிலையில்தான், கவர்ச்சியான வார்த்தைகளினூடு மக்களைக் குழப்ப நினைக்கிறார்கள். அந்தக் குழப்பத்தினூடு, தங்களைப் பெரிய மேதைகளாகக் கட்டமைக்க நினைக்கிறார்கள்.
அதாவது, அவர்கள் குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கும் வித்தைக்காரர்கள்.அவர்களுக்கு மக்களைப் பற்றியெல்லாம் எந்தவித அக்கறையும் இல்லை. மக்கள் அதள பாதாளத்துக்குள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருக்க வேண்டும்; தாங்கள் மாத்திரம், சமூகத்தில் முன்நிலையில் நிற்க வேண்டும் என்கிற குறுநல நோக்காகும்.
இந்த இடத்தில்தான் மக்கள், தாங்கள் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதையும் தங்களை முன்னிறுத்தியும் தங்களைச் சுற்றியும் பின்னப்படுகின்ற சதிவலைகளைக் கவனமாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.இல்லையென்றால், தொடர்ச்சியாக தமிழ் மக்களை யோசிக்க விடாது, ‘பரிசோதனை எலி’களாக முன்னிறுத்தும் கூட்டம் நிலைபெறும். அநீதிகளுக்கு எதிராக, நீதிக் கோரிக்கைகளோடு எழுவது என்பது அடிப்படையானது; அதனை தமிழ் மக்கள் என்றைக்கும் கைவிட்டுவிடக் கூடாது.
ஆனால், அதனை உலக ஒழுங்கில் நிகழும் இராஜதந்திர ஆட்டங்களுக்கு ஈடுகொடுத்து ஆடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது ஒரே இரவில், ஒரு போராட்டத்தால் ஒற்றை மனிதரால் நிகழ்ந்து விடாது. அது, தெளிவான சிந்தனைகளோடும் போலிகளை அடையாளம் கண்டுகொள்வதோடும் இலக்கை அடையும் வழிகளைத் தெளிவாக வரையறுப்பதின் ஊடாகவும் அடைய வேண்டியது. அதனை மறந்துவிட்டால், சூனிய வெளிகளைத் தவிர எதையும் அடைய முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago