2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பெண் வைத்தியர் கொலை:குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

Freelancer   / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலகத்தா பெண் வைத்தியர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனபடி, சாகும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி, திங்கட்கிழமை (20) மாலை உத்தரவிட்டார்.

 குற்றவாளி சஞ்சய் ராய் கூறும்போது, “நான் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடவில்லை. என்னை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். சிறையில் அடித்து துன்புறுத்தினர். பல்வேறு ஆவணங்களில் என்னிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றனர்" என்று தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில் கூறும்போது, “குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி அனிபர் தாஸ், தண்டனை விவரத்தை வெளியிட்டார். 

நீதிபதி கூறியதாவது,

“இது அரிதினும் அரிதான வழக்கு என்பதை சிபிஐ நிரூபிக்கவில்லை. எனவே குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க முடியாது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.17 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

நீதிபதி தண்டனை விவரத்தை அறிவித்ததும் குற்றவாளி சஞ்சய் ராய் கதறி அழுதார்.  

உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது, 

“எங்களுக்கு முழுமையாக நீதி கிடைக்கவில்லை. சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்காமல், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் நீதிக்கான அடித்தளத்தை விசாரணை நீதிபதி உருவாக்கி உள்ளார். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவேன்.

எனது மகளின் உயிரிழப்புக்கு மாநில அரசு ரூ.17 இலட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த இழப்பீட்டை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இதை நீதிபதியிடம் நேரடியாக கூறிவிட்டோம். இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்பதை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது” என்றார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X