2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சிகிச்சை அளிக்குமாறு உத்தரவு

Freelancer   / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு, தனியார் வைத்தியசாலைகளில், இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, புதுடெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி நிகால் விஹார் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியை, பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கை புதுடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா எம் சிங், அமித் சர்மா விசாரித்து அண்மையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில்,

“பாலியல் வன்கொடுமை, திராவகம் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் வைத்தியசாலைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் அரசு வைத்தியசாலைகள் மற்றும் தனியார் வைத்தியசாலைகள் இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

“உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், சிராய்ப்புகள், மர்ம உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பால்வினை நோய்கள், எச்ஐவி-க்கான பரிசோதனை செய்து அதற்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

“கருத்தடை, கருக்கலைப்பு குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களின் பெற்றோருக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிகளை அனைத்து அரசு, தனியார் வைத்தியர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை வரும் பெண்களிடம் அடையாள அட்டை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. எந்த காரணத்துக்காகவும் அவர்களிடம் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. இது தொடர்பாக அரசு, தனியார் வைத்தியசாலைகள் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். இந்த அறிவிப்பு பலகை ஆங்கிலம் மற்றும் அந்தந்த பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.

“பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டவிதிகள் குறித்து அனைத்து வைத்தியர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாக ஊழியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிர்வாகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். விதிகளை மீறும் சுகாதார பணியாளர்களுக்கு ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.

“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உயர் சிகிச்சை தேவை என்றால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும். அதற்கு தேவையான அம்பியூலன்ஸ் வசதியை வழங்க வேண்டும். வைத்தியசாலை சார்பில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெண்கள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதன்பேரில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என,  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .