2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சாய்ந்தமருது பிரச்சினைக்கு அரசியல் தலைமைகளே காரணம்

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில் - 

“சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச சபைக் கோரிக்கையானது அரசியல் தலைமைத்துவங்களின் தேர்தல் கால பொய் வாக்குறுதிகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பிரச்சினை என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

குறித்த விடயம்  இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இத​னை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 

சாய்ந்தமருது பிரதேச சபை என்பது இன்று நேற்றுள்ள பிரச்சினை அல்ல. அது நீண்ட நாட்களாக உள்ள ஒரு பிரச்சினை. தேர்தல் காலங்களில் அரசியல் சுயலாபங்களுக்காக அரசியல் தலைமைத்துவங்கள் வழங்கிய வாக்குறுதிகளின் வெளிப்பாடே இன்றைய நிலைக்கு காரணம்.

இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் - கடப்பாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கு உள்ளது. ஆனால், அது இதனை தீர்த்து வைக்காது இவ்வளவு காலம் இழுத்தடிப்பு செய்துள்ளது. இறுதியில் இந்த விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலையிட்டதால் அது அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. 

இரண்டு கட்சிகளினதும் தலைமைத்துவங்களுக்கிடையில் உள்ள அரசியல் ரீதியிலான பிரச்சினை இன்று ஒரு சமூகம் வீதியில் இறங்கி போராடுகின்ற அளவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அத்தோடு, இரண்டு முஸ்லிம் ஊர்களுக்கிடையில் பகைமையும் இது ஏற்படுத்தியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.   

புதிய அரசியலமைப்பு திருத்தம், மாகாண சபை எல்லை நிர்ணயம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சமூகம் இவ்வாறு வீதியில் இறங்கி போராடுவது மிகவும் மன வேதனையான விடயமாகும். மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் இருந்திருந்தால் ஒரு தொலைபேசி அழைப்பில் தீர்த்து வைக்கும் விடயமாக இது அமைந்திருக்கும். 

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருடன் கலந்தாலோசித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .