அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்திலுள்ள சாவாறு ஆற்றிலிருந்து அழுகிய நிலையில்ஆணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டதாக திருக்கோவில் பொலிஸார்
தெரிவித்தனர்.
திருக்கோவில் 2ஆம் பிரிவு விளையாட்டு மைதான குறுக்கு வீதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவசிதம்பரம் நந்தகுமார் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த புதன்கிழமை காலை 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், வீடு திரும்பாத நிலையில் தாயார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், இவரது சடலம் அழுகிய நிலையில் சாவாறு ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் பதிவுத்திருமணம் செய்திருந்த இவருக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை திருமணம் நடைபெறவிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
.gif)