படகுமூலம் வந்து புகலிடம் கோரும் இலங்கையர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கோரியமை அசாதாரணமானதும் பாசாங்கானதுமான கருத்து என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறியுள்ளார்.படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் கால் பதிப்பதற்கு முன்னர் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் வெளிவிவகார பேச்சாளர் ஜூலி பிஷப் மற்றும் குடிவரவுத்துறை பேச்சாளர் ஸ்கொட் மொரிஷன் ஆகியோர் நேற்று கூறியிருந்தனர்.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய பாதுகாப்புஅமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கருத்துத் தெரிவிக்கையில், "முதலாவதாக, இந்த யோசனையானது அகதிகள் சாசனத்தையும் சர்வதேச சட்டத்தையும் மீறுகிறது. இரண்டாவதாக, மலேஷிய ஏற்பாட்டை அங்கீகரிக்க முடியாது. ஏனெனில் அகதிகள் சாசனத்தில் மலேஷியா ஒரு தரப்பாக அங்கம் வகிக்கவில்லை. எனவே இக்கருத்துக்கள் அசாதாரணமானதும் பாசாங்கானதும் என நான் கருதுகிறேன்" எனக் கூறினார்.
அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை அந்நாட்டு குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் பிரௌனும் நேற்று விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.gif)
