க.பொ.த. உயர்தர பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளிலிருந்து ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்திற்குள் அரசியல் கூட்டங்களை நடத்துதல், பட்டாசு கொளுத்துதல், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேர்தல்கள் திணைக்களம் தடைவிதித்துள்ளது.இவ்வருட க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் இடையூறுகளின்றி இப்பரீட்சைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையாளருடன் இணைந்து தான் மேற்கொண்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
'இது தொடர்பாக பொலிஸாருக்கு தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளார். பரீட்சை நிலையங்களிலிருந்து ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்திற்குள் இடையூறு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் தடுக்கப்பட்டுள்ளது' என அவர் கூறினார்.
இம்முறை புதிய பாடத்திட்டத்தின் கீழ் 235,774 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 41,324 மாணவர்களும் பரீட்சை எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். பரீட்சை கடமைகளில் சுமார் 12,000 உத்தியோகஸ்தர்கள் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
.gif)

Comments
RSS feed for comments to this post