இலங்கை தொடர்பான பொய்யானதும் நெறிமுறையற்றதுமான பிரசாரங்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட, இரு இணையத்தளங்கள் இயக்கப்பட்ட அலுவலகமொன்றுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சீல்வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
'பிரபலமான நபர்கள் குறித்து பொய்யானதும் முறையற்றதுமான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிடுவதில் இவ்விரு இணையத்தளங்கள் சம்பந்தப்பட்டன.
இலங்கையிலிருந்து இயங்கும் அனைத்து இணையத்தளங்களும் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை அடையாளம் காண்பதும் இந்த நெறிமுறையற்ற செயற்பாடுகளுக்குப் பின்னாலுள்ள தீவிரவாத நபர்களை அடையாளம் காண்பதுமே இதன் பிரதான நோக்கமாகும். ஊடகத்துறை அமைச்சு தற்போது இணையத்தளங்களை பதிவு செய்கிறது. பெரும்பாலான இணையத்தளங்கள், மேற்படி நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க பதிவுசெய்துள்ளன.
சில இணையத்தளங்கள், உயர் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்துவிட்டு, பொய்யான திரிபுடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதன் மூலம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் இடையூறையும் அவமானத்தையும் ஏற்படுத்துகின்றன. மேற்படி இரு இணையத்தளங்களும் இந்நாட்டின் அதி உயர் சட்ட அமைப்பினால் விடுக்கப்பட்ட சட்ட உத்தரவை புறக்கணித்து இயங்கின.
பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதில் இவ்விரு இணையத்தளங்கள் நேரடியாக ஈடுபடுவதாக கண்டறிந்தபின், நீதிமன்ற உத்தரவொன்றையடுத்து குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
இந்நாடு சமூக பொருளாதார புத்துயிர்ப்புக் காலகட்டத்தில் உள்ள நிலையில் சில தரப்பினர் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் இடையூறையும் அவமதிப்பையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்'
.gif)
